Wednesday, October 30, 2019

பணம்

பணம் என்பது என்ன? ஒவ்வொருவருக்கு ஒன்று. ஏழைக்கு வயிறு நிரம்பத் தேவையான பொருள். பணக்காரனுக்கு சொத்து சேர்க்கத் தேவையான பொருள். நடுத்தர வர்க்கத்தினருக்கு துரத்த வேண்டிய பொருள். சுருக்கமாக சொன்னால், அளவுக்கு அதிகமாய் இருந்தாலும் சரி, அளவுக்கு குறைவாக இருந்தாலும் சரி நிம்மதியை தொலைதூரம் தள்ளும் சக்தி படைத்த சாதனம். அப்படி என்றால் எது அளவு? இவ்வளவு பணம் ஒருவரிடம் இருக்கலாம் என்பதை எந்த அளவுகோல் கொண்டு அளப்பது? வாழ்வின் முக்கிய Preoccupation பணம் பண்ணுவதாகவே எல்லோரும் நினைப்பார்களோ? இன்றைய கல்விப் பாடத்திட்டம் அப்படித்தானே வடிவமைக்கப் பட்டுள்ளது? அதிகம் பணம் பண்ணும் வேலைகளுக்கு தேவையான படிப்பைத்தானே தேர்ந்தெடுக்கச் சொல்லி குழந்தைகள் அறிவுறுத்தப் படுகிறார்கள்? தேவைக்கு சம்பாதிக்க வேண்டுமா? அதற்கு மேலா ? தேவையையும், ஆசையையும் பிரிக்கும் மெல்லிய நூல் எது? அது யார் கற்றுத் தந்து வரும்? இல்லை, தானாகவே புரியுமா? எப்பவானும் இது போதும் என்று தோன்றுமா, இல்லை அப்படித் தோன்ற வாய்ப்பில்லையா?

தான் ஈட்டும் பணம் முழுவதையும் செலவழித்து tally பண்ணி விட்டு உலகத்தில் இருந்து விடை பெற்ற யாரும் இல்லை. அப்படியானால் அதன் மேல் எவ்வளவு பற்று வைக்கலாம்? பணத்தின் ஆச்சரியமான குணமே, ஏழையை மனதில் பணக்காரனாகவும், பணக்காரனை மனதில் நித்ய ஏழையாகவும் வைத்திருப்பதே. வங்கி கணக்கில் கோடிகளை தேக்கி வைத்து விட்டு, மேலும் மேலும் பணம் பண்ண ஓடுபவனை உலகம் அண்ணாந்து பார்க்கிறது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு உழைப்பவனை துச்சமாகப் பார்க்கிறது. பணத்தைக் கொட்டிக் கொடுத்து வேலை வாங்கும் கார்ப்பரேட் கம்பெனி வேலையை, நல்ல வேலை என்கிறோம். வேலையை செய்து விட்டு ஊதியம் பெறுபவனை தினக்கூலி என்கிறோம். இவையெல்லாம் முரண்பாடுகள் அல்லவா?

உணவு,உடை,உறையுள் அருளப் பெற்று அவற்றைத் தக்க வைத்துக் கொள்ள உழைத்த நம் முன்னோர்களின் அமைதியை நம்மிடம் நான் தேடவே செய்கிறேன். பயங்கள். என்ன வருமோ, வந்தால் இது போதுமா என்ற பயங்கள். அமைதி, துன்பம், வளமான வாழ்வு, நோய்கள், எல்லாமே நாம் அழைத்து வரும் விருந்தாளிகளே . தொந்தரவு தரும் விருந்தினரை எப்போதும் நினைப்போமா, அழைப்போமா? என்னை விட என் சந்ததி இன்னும் அமைதியாக, உள் தேடல் செய்து கொண்டு, வாழ்வைப் படிப்பதே எனக்கு மகிழ்ச்சி. என்னை விட அதிகம் சம்பாதிப்பது அல்ல என்றே நினைக்கிறேன்.  சொல்லத் தெரியவில்லை. வாழ்வின் இந்த கட்டத்தில், ஒப்பு நோக்க முடிந்த ஐம்பதுகளில், எது சந்தோஷம் என்று ஆழ்மனம் உணர்கிறது. மனதிற்குள் பயணப்பட முயலும் எல்லோருக்கும் தெரிவதுதான்.

ஒரு வாரமாக கொரோனா வைரஸ் இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது. உலகம் முழுதும் உச்சகட்ட பயத்தில் உள்ளது. இயற்கை அவ்வப்போது மனிதனுக்கு அவனை விட தான் பெரிது என்பதை உணர்த்திக் கொண்டேதான் உள்ளது. அத்தியாவசியத் தேவைகள் என்ன என்பதை அடிபட்டு மட்டுமே நாம் உணர்வோம். நம் அறியாமை அப்படி. பால்காரரும், துப்புரவுத் தொழிலாளிகளும், விவசாயிகளும், மருந்து அடிப்பவரும், சிறு வியாபாரிகளும்தான் இன்றைய ESSENTIAL சர்வீஸ் பிரிவில் அடங்குவார்கள். படிப்பாளிகள் வீட்டில் இருந்து வேலை செய்கிறோம். எதுவும் கெட்டுப் போகவில்லை. நாம் வேலைக்கு அமர்த்தி சொற்ப வருமானம் ஈட்டும் தொழிலாளிகள் வாராது போனால் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கிறது. வேடிக்கை பார்க்கிறேன். ஆனால் பாடம் பெறுவோமா என்றால் மாட்டோம். எல்லாம் சரியான பின் மறுபடி நாம்தான் உலகைத் தாங்குவதாக நினைத்துக் கொள்வோம். கர்வம் கொள்வோம்.

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாட்சப் செய்திகள் வைரஸை விடவும் வேகமாகப் பரவுகின்றன. இன்று முதல் 144 தடை உத்தரவு தமிழ் நாட்டில். பாவம், பலருக்கு வாழ்வே போராட்டம். காரணம் பணம். ஆனால் பணத்தட்டுப்பாடு இல்லாதவர்கள்தான் அதிகம் கவலை கொள்கிறார்கள். விசித்திரங்கள். பொருளிலார் ஆனாலும், பொருள் உளார் ஆனாலும் தேடல் ஒன்றே கலியுகத்தில் என்றே தோன்றுகிறது. பொருள் தேடலை, தப்பாக விமர்சிக்கவில்லை. தேவைகள் பூர்த்தியான பின்னாவது அமைதி தேடலாம். ஆனால் செய்ய முடியவில்லையே, ஏன்? ஏனென்றால், தேவைகளுக்கு வரையறை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 144 அரசாங்கம்தான் போட வேண்டும் என்றில்லை. நமக்கு நாமே போட்டுக் கொள்ளலாம். தடை உத்தரவின் போது உள்ள சாலைகள் போல மனசு ஆரவாரமற்று இருப்பது மகிழ்ச்சி. அத்தியாவசிய நினைவுகளுக்குத் தடை இல்லை. எது அத்தியாவசியம் என்று அறிய முயற்சி வேண்டும்.

Wednesday, October 16, 2019

மாம்பழத்து வண்டு

மாம்பழம் ருசி. வண்டு உள்ள மாம்பழத்தை வெளிப்பார்வையில் இருந்து கண்டறிய இயலாது. சாப்பிடவும் லாயக்கில்லை. நறுக்கினபின்னே தெரிய வரும். மனிதனை, அவன் மனதை கீறிப்பார்த்து, பழக ஆரம்பித்தோமானால், உலகம் போர்க்களமாகும். வண்டு துளைக்காத மாம்பழங்களே அதிகம். ஏதோ ஒன்றிரண்டை வண்டு  துளைத்திருக்கும். ஆனால், நாம் அனைவரும் வண்டு துளைத்த மாங்கனிக்கு ஒப்பான மனிதர்கள்தான் என்பது பரிதாபகரமான உண்மை.  "நான் அப்படி இல்லை, முழு சுத்தம், ரொம்ப நல்லவன்" என்று கூறிக்கொண்டோமானால், அந்தக் கூற்றே ஒரு சிறு வண்டுதான் . ஈகோ வண்டு . ஆனால்,பழத்தைத் தூக்கிப் போடலாம். சகமனிதர்களைத் தூக்கி ஏறிய இயலாது. வண்டுப் பகுதியை வெட்டி விட்டுப் பழத்தை உண்ணுவது போல், வேண்டாததை விட்டு, வேண்டியதை விழுங்கி நடத்தும் நாடகமே வாழ்வு. நல்ல பகுதியை உண்ணும் போது வண்டிற்காக வெட்டின பகுதி நினைவில் வந்தால் பழம் ருசிக்காது. சகமனிதனின் குறைகள் மேல்மனத்திற்கு வரின் வாழ்க்கைப் பயணமும் ருசிக்காது.

இன்று ஏன் இந்த யோசனைகள்,தெரியவில்லை. சில சமயம்,  "ஓ, களையப்பட வேண்டியவை நம்மிடம் இவ்வளவு உள்ளதா!"  என்று தோன்றுகிறது. பற்று, எதிர்பார்ப்பு, கோபம், துடுக்குப் பேச்சு,சந்தேகம் என்று எல்லா மனிதர்களிடமும் ஒரு லிஸ்ட் உண்டு. இவையெல்லாம் தைரியமான திருடர்கள் போல கூட வரும். " நான் திருடன்தான், முடிந்தால் பிடித்துத் துரத்து. மறுபடி எப்போ வேண்டுமானாலும் திருட வருவேன், அதாவது உன் அமைதியைத் திருட" , என்று சவால் விடும் குணங்கள். இவைகளைத் துரத்த முடியும். மறுபடி வர பயம் கொள்ளுமளவு விரட்ட முடியும், கவனமாக இருந்தால். அலட்சியம் காட்டினால் , திருட்டு நடக்கும்.கவனம் என்றால் விழிப்பு. எப்போதும், உண்மையாய், விழித்திருத்தல். நாம் தவறின் பக்கம் போகும் போது , நம்மைத் தடுப்பது ஒரு விழிப்பு நிலை. அந்த ஒவ்வொரு நிகழ்வையும், வேகமாக முன்னேற வாய்ப்பாகப் பார்ப்பதும் விழிப்பு. இரண்டும் தேவை.

நன்றாக வாழ, யோசிக்க, கஷ்டப்பட வேண்டும் ,  தியாகம் செய்ய வேண்டும் என்ற நினைவு வந்தால் அது உண்மை அல்ல. இந்தக் கூற்றின் மறுபக்கமே உண்மை. நல்ல நினைவும் வாழ்க்கை முறையும் ஒரு மகிழ்ச்சியான, துன்பங்கள் தீண்டாத நிலை. மேல் பார்வையில் தெரியும் சிலவற்றை சுரண்டிப் பார்த்தால் உள்ளே என்ன உள்ளது தெரியும்.There is a life behind appearances . கடல் நீரைத் தொடலாம். காற்றை? தொட இயலாது. உணர மட்டுமே செய்யலாம். உலகில் உணரும் பொருள்களும் உண்டு. தொடும் பொருள்களும் உண்டு. நம் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகும் நாள் நல்ல நாள், ஒரு சிறிய அடி வாங்கினால், அது கெட்ட நாள் என்று நினைக்கிறோம். தப்பு. அது நம்மை ஒரு படி மேலே ஏற்றி விட கடவுள் தரும் வாய்ப்பு என்பது, காற்று போல் உணர வேண்டிய ஒன்று. இந்தத் தருணம், ஒரு அழகான நிகழ்வை பகிர விரும்புகிறேன். காலை, ரோஜாப்பூ வாங்க சென்றோம். பல வண்ண ரோஜா மலர்கள். ஒரு குழந்தையை,ரோஜாப்பூ என்ன நிறம் என்று கேட்டால் அது குழம்பி விடும். நாம் குழந்தையாய் இருந்த போது ரோஸ் நிறம் என்று உடனே கூறுவோம். மஞ்சள் என்று பதில் கூறினால், டீச்சர் தலையில் கொட்டுவார்கள் . இப்போதைய குழந்தை, வேறு ஏதேனும் கலர் சொன்னால், டீச்சருக்கு பயம் வந்து விடும்.  "ஓ,நேற்று இந்தக் கலரில் ஒரு ரோஜா வந்து,நமக்குத் தெரியவில்லையோ, குழந்தையின் பதில் தப்பு என்று கூறினால்,அதன் சைக்காலஜியை கெடுத்து விட்டீர்கள் என்று அதன் பெற்றோர் வந்து விரட்டுவார்களோ" என்று.

சரி, இப்போது அதில்லை பிரச்சினை. தொன்று தொட்டு உள்ள, ரோஸ் என்ற இளம் ரோஸ் நிற பூவை சுற்றி வண்டுக்கூட்டம். அவை மற்ற நிறங்களில் உள்ள ரோஜாப்பூக்களை திரும்பியும் பார்க்கவில்லை. அந்தப் பூக்கார அம்மா சொன்னார்கள். அந்த ஒரிஜினல் ரோஜாக்கள் தீரும் வரைதான் அந்த வண்டுகள் அங்கே சுற்றுமாம். எனக்கு கண்கள் பனித்தது . இந்த வித்தியாசம்தான், இறைவன் படைப்புக்கும், மனிதன் படைப்புக்கும். மனிதன் தவிர மற்ற  ஐந்தறிவு படைத்த உயிரினங்கள்  இயல்பாக  உணரக் கூடியவற்றை மனிதனால் செய்ய முடிவதில்லை. தொடக்கூடிய கடலை நம்பும் அவனுக்கு காற்றின் இருப்பை உணர்வதில் சிரமம் உள்ளது. நம்மையும் அவன்தான் படைத்தான், ஆனால் நம் அறிவை,பேரறிவாக்கும் என்று நினைத்து, நாம் செய்து கொண்டுள்ள சிக்கல்கள், கொஞ்சமில்லை. இன்று என்னவோ வண்டு எட்டி எட்டிப் பார்க்கிறது.

மாம்பழத்தின் சிறு வண்டுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா? நமக்கே இனம் காண இயலாது ,  நமக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மோசமான  எண்ணங்கள் உண்டு. அவை இருப்பதை நாம் உணர விரும்பாததால் உணர்வதில்லை. அவை மேலே சொன்னவற்றையும் விட சீரியஸ் ஆனவை. ஏனென்றால், கோபதாபங்கள் வெளியே தெரியும் தன்மையன. தப்பு என்று நிதர்சனமாய்த் தெரிவன. சரி போலத் தென்படும், நம்மை நாமே சமானப் படுத்திக் கொள்ளும் , அழகான போர்வை போத்திக் கொண்ட கெட்ட பழக்கங்கள் உண்டு. சபிப்பது, பழிவாங்க எண்ணுவது, நமக்குப் பிடிக்காதவர்களின் துன்பத்தை ரசிப்பது , மித்ரபேதம் செய்வது, என்று பல. இவை வெளியே தெரிவதில்லை. ஏனென்றால், இந்த எண்ணக்கலவையை  வைத்துள்ள பாத்திரம் ஆழ்மனது. மேல்மனது கட்டளை இட்டு வாய் நல்ல செய்தியை தான்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கும். கண் மூடி அமைதி காத்து யோசித்தால் மட்டுமே மனம் முழு சுத்தமா என்று புலப்படும். உண்மையாய்த் திருந்த விரும்பினால் மட்டுமே அழுக்குகள், அடைப்புகள் வெளிவரும். வந்தால்தான் அவற்றை நீக்கலாம். நம்மை சோதனைக்கு உள்ளாக்கிக் கொள்வதே வழி. 

Saturday, October 12, 2019

சாக்ஸபோன் ஓய்வெடுக்கப் போனது

பத்மஸ்ரீ, கலைமாமணி கதிரி கோபால்நாத் மறைவுச் செய்தியுடன் அன்றைய நாள் தொடங்கியது. வயசு ஏற ஏற மனிதர்கள், மாமனிதர்கள் எல்லோரின் மறைவும் அதிர்ச்சியை விட, ஆழமான, வலியையே உண்டுபண்ணுகிறது. ஒரு மிக வித்தியாசமான வாத்தியத்தைக் கையாண்டு, அதில் எந்த உயரம் தொட இயலுமோ தொட்டு , அவர் உறங்கினதால் சாக்ஸபோன் தூங்கி விடுமோ என்ற அச்சம் உண்டு பண்ணும் அளவு சிறப்பாக வாழ்ந்த மனிதர் நேற்று இருந்தார், இன்று இல்லை. என்ன, அவர் கொஞ்சம் முன்னால் பயணம் தொடங்கினார், முன்னால் முடித்து விட்டார். நாம் மட்டும் தொடர்பயணமா செய்யப் போகிறோம் என்ற தெளிதல் . ஆனால் ரொம்ப யோசித்தால், நம் அனைவரதும் தொடர் பயணமே. இறங்கி, இறங்கி,வேறு உடல் மாற்றி,நம் ஆத்மா செய்யும் பயணம்.

நல்ல நாளில், நட்சத்திரத்தில் பிறப்பு நிகழ வேண்டும்  என்று எல்லோரும் சொல்கிறோம்.. இறுதி நாளுக்கும் அது பொருந்தும். எவ்வளவு பெரிய கலைஞர், எத்தனை முக்கியமான செய்தி. ஆனால், வேண்டாத செய்திகளை மணிக்கணக்காகத் தரும் ஒரு தொலைகாட்சி சேனல் கூட, அவர் மறைவுச் செய்தியை இரண்டு நிமிஷம் கூடக் காட்டவில்லை, நான் அறிந்த வரை. ஏன் தெரியுமா?  சீனப் பிரதமருடைய இந்திய, தமிழ்நாட்டு விஜயத்துடன் இந்நிகழ்வு சேர்ந்து விட்டதால். சீனப் ப்ரதமருடைய  ஒவ்வொரு வேளை சாப்பாடும் என்ன, அவர் கார் எத்தனை கோடி என்றெல்லாம் செய்தி வெளியிட்ட ஊடகம், ஒரு இரண்டு நிமிஷ இரங்கல் செய்தி கூட சாக்ஸபோன் சக்ரவர்த்திக்குச் சொல்லவில்லையே என்றிருந்தது. எதற்கு சில நிகழ்வுகளுக்கு மட்டும் இத்தனை ஆர்பாட்டம்  என்ற கோபமும் வந்தது. ஆனால், அது பெரிய தவறில்லை. பண்டைக் கால அரசவம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறெல்லாம் மரியாதை செய்யப்பட்டதுதானே? இப்போது ராஜாக்கள் இவர்கள். கொண்டாட்டம் ஓ கே தான். ஆனால் அந்தக்காலத்து அரசர்களே கலைஞர்களுக்குத் தனி இடம் அல்லவோ கொடுத்தார்கள்!! பிரதமர்,மோடி அவர்கள் " என் எண்ணம் கோபால்நாத்தின் குடும்பத்துடன் உள்ளது " என ட்வீட் செய்திருந்தது சற்று மனதை சாந்தமாக்கியது.

தொழில்நுட்ப வளர்ச்சியும்,மனித நேயமும்,தலைகீழ் விகிதத்தில்  உள்ளன. முகத்தில் அறைவது போல் இருந்தாலும் உண்மை அதுதான். வானம் பார்த்து நேரம் கணக்கிட்ட, ஆதி மனிதனின் எளிமையை தொழில்நுட்பம் என்ற பூதம் விழுங்கி விட்டது. அகஸ்திய மாமுனிவர் வாதாபியை ஜீரணம் செய்தது போல் , எளிமையை, முழுமையாக ஜீரணம் பண்ண முடியவில்லை. காரணம், அங்கங்கே மனதால் சிந்திப்பவர்களும் இருப்பதால். ஆனால் அவர்கள் வாயைத் திறந்தால் , அவர்களை மனநிலை பிறழ்ந்தவர் போல் பார்க்கிறோம். அல்லது கோபம் கொள்கிறோம். நடந்த கலைநிகழ்ச்சிகள் ஜாதி வித்தியாசங்களைக் காட்டியது என்று டி . எம் .கிருஷ்ணா கருத்துத் தெரிவித்தால் அவர் மேல் பாய ஒரு கும்பலே தயாராக உள்ளது.  மீ டூ விவகாரம் ஒரு முப்பது நாள்களுக்கு வெறும் வாய் மெல்பவர்களுக்கு அவலானது. அப்போதைக்கப்போது, ஒரு பரபரப்புக்காக எதிலேனும் ஈடுபடுவது. இது வருந்தத் தக்க நிலை அல்லவா? ஆப்பிள் என்றால் இப்படி இருக்கும். ரோஜா என்றால் இப்படி இருக்கும். யானை என்றால் இப்படி இருக்கும். மயில் என்றால் இப்படி இருக்கும். அதே போல் எளிதாக, மனிதன் என்றால் இப்படி இருப்பான் என்று சொல்வது எப்படி சாத்தியம்? அவனுக்கு மனம் என்ற ஒன்று அதிகப்படியாக உள்ளதே? அதுதானே அவனை வேறுபடுத்திக் காட்டும் விஷயம்?  மனம் செம்மைப் பட்டால்தான் மனிதன். இல்லை என்றால் அவனும் ஒரு இருகால் விலங்கினமே .

மனிதனாய், மாமனிதனாய் ஒருவர் வாழ்வது கொண்டாடப் பட வேண்டிய ஒன்று. அவர்கள் மறைவு சாதா நிகழ்வல்ல. கட்டுரை எழுதும் நேரம் பூரவும் கதிரி கோபால்நாத் அவர்களின் கம்பீரமான பாக்யாத லக்ஷ்மி பாரம்மா மனதில் ஒலிக்கிறது. அதுவே பெரும்பாலும் அவர் கச்சேரிகளின் மங்களமாக இருந்துள்ளது. மனம் மௌன அஞ்சலி செய்கிறது. மனதை லகுவாக்க ஒன்று கூற வேண்டுமானால், அவருடைய அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாடல் மூலம் திரையிசையை அதிகம் நேசிக்கும் எண்ணற்றோர் மனதிலும் ஒரு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர். அடுத்த கட்டுரை சந்தோஷமான நிகழ்வு பற்றிப் பேச இறைவன் அருளை யாசிக்கிறேன்.

Tuesday, October 8, 2019

வாசனை

எழுதத் தொடங்கி விட்டேன். கடைசியில்தான் தலைப்பு கொடுக்க வேண்டும்.
இனிப்பு மிக்ஸ்சர் என்று தலைப்பு தரலாமா என்று தோன்றுகிறது.  ஒவ்வொரு நாளும் புதிய சந்தோஷங்களை, நிறங்களை, அனுபவங்களை சேர்ந்து தருவதால், மிக்ஸ்சர் என்கிறேன். இனிப்பு சுவையை மட்டும் இன்றைய தினம் எடுத்துக் கொள்கிறேன். கசப்பும் காரமும் வேண்டாம். மிக்ஸ்சரில் முந்திரிப் பருப்பு அகப்பட்டால், சுவை அரும்புகள்  மகிழுமே, அது போல இன்றைய இனிமையான நிகழ்வு என் குருஜியின் கச்சேரி.  இரண்டு மணி நேரம், ஒரு தியானம் செய்யும் மனநிலையில்தான் கேட்டு வந்தேன்.
   
என் போன்ற பெண்களுக்கு எப்பவும் ஒரு குழப்பம் உள்ளது. பிடித்ததை செய்வதா அல்லது செய்வதைப் பிடித்தமானதாக ஆக்கிக் கொள்வதா என்பதே அந்தக் குழப்பம். இரண்டும் தப்பில்லை. பிடித்தது செய்பவர்கள் ரசித்து வாழ்கிறோம். செய்வதைப் பிடிக்கும்படி பண்ணிக் கொள்வது அமைதி. அதை ரசிக்கவும்  வேண்டுமெனில் ப்ரயத்தனம் தேவை. பாட்டு பிடிக்கிறது. படிக்கப் பிடிக்கிறது. வானம் பார்க்கப் பிடிக்கிறது. குழந்தைகளைத் தொட்டுப் பார்க்கப் பிடிக்கிறது. வயதானவர்களிடம் உள்ள குழந்தைத்தனம் பிடிக்கிறது. குழந்தைகளிடம் உள்ள மனமுதிர்ச்சி பிடிக்கிறது. முழு அமைதி  பிடிக்கிறது.விவாதங்கள் இல்லாத  நாள்கள் பிடிக்கிறது. சமைக்கப் பிடிக்கிறது. செருப்பு போடாமல் நடக்கப் பிடிக்கிறது. என்னை யோசிக்க வைப்பதால் சிலசமயம் சிறு முரண்பாடுகள்  கூடப் பிடிக்கிறது.

பிடிக்கிறது வரிசையில் பாட்டு முதலில் வந்துள்ளது. இப்போது எழுதுவது கச்சேரி சென்று வந்ததன் தாக்கம். 1997ல் இருந்து மணிசுந்தரம் சாரைத் தெரியும். இன்று விஜயதசமி. இதே போல் ஒரு விஜயதசமி நாளில்தான் முதலில் அவர்கள் வீட்டுக்குப் போனேன், மாணவியாக.  முதலில் கற்றுக்கொண்டது ஷண்முகப்ரியா ஸித்தி விநாயகம். இன்றும் ஷண்முகப்ரியா காற்றில் கலந்து வந்தாலும் மனது அமைதியாகிவிடும். ஒரு சில விஷயங்களே மனம் தொடும் ஆற்றல் வாய்ந்தவை. சார் பாட்டு Therapeutic என்று நினைத்துக் கொள்வேன்.  நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அருளப் பட்டுள்ளது. ஏதோ ஒரு செயல், நம்மை விட சிறப்பாக யாரும் செய்ய முடியாது என்றிருக்கும். அதில்தான் நாம் பூரணமாக வெற்றி பெற இயலும். பாட வருபவர்கள் எல்லாரும் பாடகர் இல்லை.

 பாட்டு கற்கப்  போனது என்னுடைய மிக சந்தோஷமான அனுபவம். கற்றல் என்பது வெறும் ஸ ரி க ம ப இல்லை. நேற்று கச்சேரியில் பெஹாக். வேறு யார் பெஹாக் அவ்வளவு அழகாகப் பாட முடியும் என்றிருந்தது. சார் பாடி நான் கேட்ட முதல் பெஹாக் நாராயணதே . பெஹாக் ராகம் ஒரு உருக்கொண்டு பகவான் நாராயணனுக்கு நமஸ்தே சொல்கிறது என்று அப்போதே நினைத்துக் கொள்வேன். வருடங்கள் உருண்டோடி விட்டன. மனம் உயரங்களில் சஞ்சரிக்கும் போது வாழ்வின் சிறு கவலைகள் தீண்டுவதில்லை. புவிஈர்ப்பு  எல்லையைத் தாண்டின ஒன்றை கீழே இழுக்கும் சக்தி பூமிக்கு இல்லை.க்ளாஸ் போகும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன், இசையும்  அதை சதாகாலம் ஸ்வாசிப்பவர்களும் வேறு உலகத்தவர் என்று. உலக நிகழ்வுகளால் இழுக்கப்படாமல், அதாவது புவி ஈர்ப்பு விசையைத்  தாண்டி போன பொருள்களுக்கு இணையான இருப்பு சாத்தியம் என்று தோன்றும். வாழ்வு பல மிக அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டி உள்ளது. எல்லாம் இருந்தும் எளிமையானவர்கள். எல்லாம் கிடைத்துள்ளதற்கு நான் காரணம் இல்லை என்பதை உணர்வு பூர்வமாய் அறிந்தவர்கள்.இன்னொரு பிரிவினர் வாழ்வு எதைக் கொடுப்பினும் அதை ரசிப்பவர்கள். எளிதில் கிடைக்க முடியா சொத்தான த்ருப்தியைத் தனதாக்கிக் கொண்டவர்கள்.

பள்ளி ஆசிரியர் போல,என் மனம் கவர்ந்தவர்களுக்கு ரேங்க் தர இயலாது. சார் ஒரு இசை ஆசிரியர் மட்டும் இல்லை. மேலே சொன்ன இரண்டு பிரிவில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற அலசலும் தேவை இல்லை. ஷண்முகப்ரியா போல, தர்பாரி கானடா போல , எப்போது கேட்டாலும் இனிமை தரும் ராகம் போல ஒருவர். வாழ்வின் பல கட்டங்களில் அறிமுகமாகி என்னுடன் (மனதளவில்) ,  தினம் பயணப்பட்டுக் கொண்டுள்ளவர்கள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களில் பலரை எப்போதோதான் சந்திக்கிறேன்,தொடர்பில் வருகிறேன். ஆனாலும் பூக்கூடையில் தங்கிய ஜாதிமல்லியின் மணம் போல, மனத்தில் ஒரு வாசனை தங்கி உள்ளது. இன்றைய கச்சேரி, மணத்தை மனம் உணர தூண்டுகோலானது . 

Thursday, July 18, 2019

வாட்சப்பும் நானும்

செவ்வாய்கிரகத்தில் இருந்து தப்பிய ஒரு ஜந்து பூமிக் கோளத்தில் நுழைந்தால் அதனால் அனுசரித்து வாழ இயலுமா? இயலாது. தொழில் நுட்பத்தின் பூதாகரமான வளர்ச்சியில் சிக்கிக் கொண்ட, இந்த பூமி கோளத்தில் வந்து மாட்டிய ஒரு வேற்று கிரஹ  ஜந்துவே நான். அதுவும் வழி அறியாது அல்ல, வழி அறிந்தும் சிக்கிக் கொண்ட முட்டாள். தெரிந்து செய்தாலும், அறியாமையினால் செய்தாலும் தப்பு தப்புதான். நெருப்பு தெரிந்து தொட்டாலும் சுடும். தெரியாமல் தொட்டாலும் சுடும். விஷமென அறிந்து குடித்தாலும், அறியாமல் குடித்தாலும் முடிவு ஒன்றே. விளையாடவில்லை. நிஜம். விளையாட்டு சீரியஸான விஷயம் தெரியுமா? கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதி நிமிஷங்கள் சொல்லும்,விளையாட்டு ஒன்றும் விளையாட்டல்ல. நியூசிலாந்த் கேப்டன் கேன் வில்லியம்சன் , உலகக் கோப்பையைத் தவற விட்டபின் காட்டிய அமைதி. வாழ்க்கையில், தவிர்க்க இயலாதவை உண்டு, அதற்கு எதுவும் செய்ய இயலாது என்ற புரிதல். நம்மில் எவ்வளவு பேருக்கு உள்ளது? விளையாட்டு அவர்கள் தொழில். ஆனால் அவர்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ள இயலுமா,என்ன!!!

வாட்சப்பிற்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமே. நாலு வருஷத்தில் ரெண்டு முறை தூக்கிப் போட்டு விட்டு மறுபடி பதிவிறக்கம் பண்ணினேன். பாதிக்கு மேல் அவசியமற்ற குறும் செய்திகள். அதாவது தேவலை. பார்ப்பதும் பார்க்காது இருப்பதும் அவரவர் தேர்வு. குறும் செய்திகள், Forwards அனுப்புபவர்கள் என் டார்கெட் இல்லை. அவர்களுக்கு நேரம் அதிகம் உள்ளது அல்லது நேரத்தை சரியாக உபயோகிக்கத் தெரிகிறது என்று சொல்லலாம். அல்லது நேரத்தை வீணடிக்கும் பேர்வழிகள் என,  குற்றம் கண்டுபிடிக்கும் தொனியில் கூறலாம். ஏதோ தொடர்பு தேவைப் படுகிறது. கைபேசியுடன் அலைகிறார்கள். ஆனால் தொடர்புக்கு கண்டிப்பாக சார்ந்திருக்க வேண்டிய விஷயமாக வாட்சப் வளர்ந்து வருவதே சிக்கல். தொடர்புக்கு நேரில் பார்க்கலாம். தொலைபேசியில் அழைக்கலாம். கடிதம் எழுதலாம். ஒழுங்கான வார்த்தைப் பரிமாற்றங்கள் நிகழும். அதிலேயே சிக்கல் யாதெனில், நாம் பெரும்பாலும் வெளிப்படுத்த விரும்புவதைத் தெரிவிக்கப் பேசுவதில்லை. மனதும் வார்த்தையும் நேர் கோட்டில் இருப்பதில்லை.  எனக்கு அத்தகைய பரிமாற்றங்கள் பிடிக்கவில்லை. ரொம்ப யோசனை செய்யாமல், வார்த்தை தேடாமல், நேரம் பார்க்காமல், வார்த்தை தடிக்காமல் "இந்த நொடி உன்னுடன் பேசப் பிடிக்கிறது, பேசறேன் அவ்வளவே ", என்று யார் கூடப் பேச முடியுமோ, பேசினால் போதுமே?

வாட்சப் அத்தனை குறுக்கு வழி யோசனைகளையும் அதிகமாக்கும் ஒரு சாபக்கேடு. ரூம் போட்டு யோசித்து மனவக்கிரம் வெளிப்படாத செய்தி அனுப்பலாம். அதில் என்ன நேர்மை இருக்கும்? வார்த்தை தேடித் தேடி செய்தி அனுப்பலாம். அதில் நேர்மை எங்கே இருக்கும்? நாள் முழுதும் அதில் மூழ்கி அதை மற்றவர் அறியா வண்ணம் செய்ய பல வழிகள் உண்டு. இதெல்லாம் தேவையா? இது பற்றி எழுதுவதே நேரவிரயம். இப்போ எனக்கு ஏன் திடீர் கோபம் அல்லது ஞானோதயம் என்று என் வாட்சப் தொடர்புகள் கேட்கிறார்கள். சரியான கேள்விதான். ஞானம் எப்பவோ ஏற்பட்டது. ஆனால் நான் புத்தராக இல்லாததால், ஞானப்பாதை எனக்கு மூடிக்கொண்டது. கோபம்?  உண்டு. எப்படி என சொல்கிறேன். நான் தொலைபேசுபவர் எண்ணிக்கை குறைவு. ஆனால் அப்படிப் பேசுவோரிடம் எந்தவித மனத்தடைகளும் அற்ற, கணக்குப் பார்க்காத எளிய தொடர்பு என்னுடையது. அதைக்  காணாமல் செய்தது வாட்ஸப்தான். நேர்பேச்சு  மனச்சுருக்கங்களுக்கு இஸ்திரி போடும். இந்தக் குறும் செய்திகள்,  Indifference, Ego,sarcasm, Imagined  Superiority, போன்ற மறைக்க வேண்டிய உணர்வுகளை--இந்த உணர்வுகள் இல்லாமல் இருப்பது உத்தமம். அப்படி இருந்தால் , அவற்றை  வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே உணர்கிறேன். யார் மீதும் குற்றம் இல்லை. நான் அனுப்பும் வாட்சப் குறும்செய்திகள் மற்றவருக்கும் இதையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் உன்னுடன் தொடர்பில் வர இப்போது இயலாது என்பதை செய்தியாகப் படிப்பதற்கும், வார்த்தைகளில் கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்திருந்தால், என் போன்ற வேற்று  கிரஹவாஸிதான் நீங்களும்.

செவ்வாய் கிரஹத்தில் இருந்து வந்து இங்கு வாழ வேண்டுமானால், இப்போது பூமிப்பந்து சிக்கியிருக்கும் ஆபத்துகளை, கேன் வில்லியம்சன் போன்று தவிர்க்க இயலாதவை என்ற தலைப்பின் கீழ் போட்டு அமைதி காத்து வாழ முயலலாம். அல்லது தற்காத்துக் கொள்ளலாம். அறிவை திசை திருப்பி, தவறான ஊகங்கள், புரிதலுக்கு இட்டுச் செல்லும் ஒன்று எப்படி நல்லதாகும்? Facebook ம் இதே கைங்கரியம் செய்கிறது . நான் அதிகம் பயன்படுத்தாததால், அது என் வாயில் விழவில்லை. கைபேசியே கெடுதல்தான். தொலைபேசி ஒரு தொலைத்தொடர்பு சாதனம். இருந்த இடத்தில் இருந்து தொலைவில் உள்ளவருடன் பேச. இப்போ என்ன நடக்கிறது?  அடுத்த வீட்டில் உள்ளவரிடம் கூட, போய்ப் பேசுவதில்லை. கைபேசி வழி தொடர்புதான். அதுவும் இளைஞர்கள் ஒரு படி மேல். கைபேசி சிணுங்கின உடன் அதை எடுத்துக் கொண்டு வேறிடம் ஓடுகிறார்கள். இருந்த இடத்தில் இருந்து பேசும் வசதியைத் தொலைத்த  தொலைபேசிக்கு, பெயர்மாற்றம் செய்யலாமா? நூறில் தொண்ணூறு பேர் செய்வதால், ஒரு தீமை நன்மை ஆகாது. அதேதான் இதற்கும். எல்லா சாதனங்களையும் அவசியத்திற்குப் பயன்படுத்துகிறோமா அடிமைப்பட்டுப் பயன்படுத்துகிறோமா என்று நம் மனம் சொல்லும். வாட்சப் பயன்படுத்தும் போது ஒரு முறை கூட திருட்டு, குருட்டு யோசனைகள் தீண்டவில்லையானால், நாம் அவசியம் கருதிப் பயன்படுத்துகிறோம். இல்லையெனில், அது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றே. 

Friday, July 12, 2019

உள்ளும் உடம்பும்

அரவிந்த ஆஸ்ரமத்தில் இருந்தோம்,நேற்று இந்த நேரம். அமைதி. உள்ளும் புறமும். அலைகடல் ஓரம் ஆசிரமம். கடலின் உள்ளே ஆழம். கடலின் மேற்பரப்பு அதற்கு சம்பந்தமே இல்லாத ஓயாத Activity . ஒரு நிமிடம் இந்த அலைகள் சும்மா இருக்கா பாருங்கள். அடியில் எப்படி இருப்பாய் என்றால் அதை விவரிக்க அலைகளால் இயலாது. அது போன்று ஆழ்மன எண்ணங்களுக்கு வடிவம் தருவதும் சிரமமே. அதனால்,பயண அனுபவங்கள் பற்றிய விவரங்கள் நோக்கி போஸ்ட் நகர்கிறது.

பயணம் படிப்பினை என்கிறோம். உள்ளிற்கா உடம்பிற்கா? உடம்பு அடையும் அனுபவங்களையே உலகம் படிப்பினை என்கிறது. அந்தப் படிப்பின் பலன் உடல் அழியும் போது முடிந்து விடுகிறது. உடம்பால் வள்ளுவன் சொன்னாற் போல் கசடற கற்க இயலுவதில்லை. மனத்தால் அது சாத்தியம். கற்றது மனதில் நிற்கும். அதன்படி நிற்றலும் நிகழும். பயண அனுபவங்களை அனுபவித்து பாராட்டி சொன்னவர்கள் உள்பயணத்திற்கு புறப்பயணம் ஒரு பாடம் என்று சொல்லி இருப்பின் அது உண்மையே. இல்லை என்றால் அது பொய் . அது ஒரு தற்காலிக குதூகலம் அன்றி வேறெதுவும் இல்லை. நேரம்,வயிறு, எல்லாவற்றின் மேலும் செய்யும் Attack . பணம் மீதும்  என்று சொன்னால் அடி வாங்குவேன். என்னை கருமி என்று நினைப்பீர்கள். 

குளிர் பிரதேசத்தில் பயணிக்க கம்பளி வேண்டும், வெப்பமான இடம் என்றால், காட்டன் உடை வேண்டும், பஸ் இல்லாத இடத்திற்கு காரில் போக வேண்டும் , முன்னாடியே பயணச்சீட்டு வாங்க வேண்டும் , இங்கு இந்த உணவு கிடைக்கும் அல்லது கிடைக்காது போன்ற superficial விஷயங்கள் தெரிந்து பெரிய பலன் என்ன, தெரியவில்லை. மறுபடி அந்த இடங்கள் சென்றால் கஷ்டம்  அதிகம் இருக்காது. திட்டமிடல் சுலபம். அவ்வளவுதான். வேறு யாரோ கேட்கும் போது , அந்த லாட்ஜ் போகாதே, ஏசி வேலையே செய்யாது என்று நம் ஒரு நாள் அனுபவத்தை  நிஜம் போன்ற தொனியில் கூறி நாம் தங்க இடம் தந்தவருக்கு ஒரு கஸ்டமர் கிடைக்காது செய்யும் நல்ல காரியம் செய்வோம்.

உள்ளும் மனமும் அடையும் அனுபவம்,பாடம் வேறானது. ஆனால்,அதற்கு உடல் பயணப்பட வேண்டுமா என்பதே கேள்வி. தேவை இல்லை என்பது கருத்து. ஒரே இடத்தில் இருந்து கொண்டு நீண்ட தொலைவு பயணிக்கலாம்.சுகமாக. கண்மூடி. ரோடில் அது முடியாது. "ஏ பெரிசு,சொல்லிட்டு வந்திட்டியா" என்பார்கள். உடம்பின் வேகத்தை விட உள்ளின் வேகம் அதிகம். பயண முன்பதிவு வேண்டாம். மாறி மாறி சாப்பிட வேண்டாம். உள்ளிற்கு உடை,Presentable ஆன உடை தேட வேண்டாம். ஏறி,இறங்கி, முட்டிக்கு தைலம் தேட வேண்டாம். ரெண்டு நாள் தங்கின ரூமை விட்டுக் கிளம்பும் நேரம், மனதில் ஒரு Pang உடன் திரும்பிப் பார்க்க வேண்டாம். மறுபடி எப்போ பயணம் என்ற எதிர்பார்ப்புகள் வேண்டாம். ஆனால் பயணம் சந்தோஷமே. சின்ன சந்தோஷமே. சின்ன ஆசைகளின் கூட்டமே உடல்  வாழ்க்கை. படிப்பினை என்ற கதைகள் சொல்லாமல், அது என் சின்ன ஆசை. பயணிக்கிறேன் எனலாம். மற்றபடி, புறப்பயணம் தவிர்த்து அல்லது குறைத்து பரமசிவன் கழுத்து பாம்பு போல் ஓரிடம் இருக்க இயன்றால் அது சௌக்கியமே. பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Monday, July 8, 2019

VERBAL DIARRHEA

வயிறு கோளாறாகி, கழிவு ஆசனவாய் மூலம் வெளியேறினால் அதன் பெயர் ஆங்கிலத்தில் டயேறியா. வார்த்தைகள் தடித்து வாய்வழி கட்டுப்பாடற்று வெளியேறினால் அதன் பெயர் வெர்பல் டயேரியா. தடித்த வார்த்தைகள் மலத்திற்கு சமம். வயிறு கோளாறு நீங்க கழிவு வெளியேறணும் . ஆனால் வெர்பல் டயேரியா கட்டுப்பட வார்த்தைகள் உள்ளே போகணும். எதையான சாப்பிட்டு ஒரு முறையேனும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அவதிப் படாதவர் இல்லை. அதே போல் வார்த்தை தடித்து வார்த்தைகள் கொட்டி அனுபவப் படாதவரும் இல்லை. வயிற்றுப் போக்கை அவதி என்கிறேன். ஆனால் வார்த்தை வீச்சை ஏன் அனுபவம் என்கிறேன், தெரியுமா?  காரணம் உள்ளது.வயிற்றுப்போக்கு வியாதி என்று உணரும் நாம்,அவதி என்று உணரும் நாம், வார்த்தை வீச்சும் வியாதி என்று உணரவில்லை. ஒரு கேவலமான,திருத்திக் கொள்ள வேண்டிய அனுபவம் என்று உணர்வோர் கூட சிலரே.

வயிறு சுத்தமாக இருக்க எப்பவும் சரியாக அளவாக சாப்பிட வேண்டும். கொஞ்சம் மாறினாலும் கோளாறு. வார்த்தை சுத்தத்திற்கும் அதேதான். அளவு மீறும் எல்லாம் நஞ்சு. விஷம். இயற்கை ஒரு கொடை . தவறு ஏற்பட முடியாத இறைவனின் அரசாட்சி வழங்கிய கொடை . அதில் எல்லாம் இன்பம்தான். நாம் குறுக்கிடாதவரை இன்பம்தான். நமக்குத்தான் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்க வேண்டுமே? Limited Human Vision கொண்டு தலையிட வேண்டுமே? விலங்குகள் ஒரு நாளை எப்படி எதிர்கொள்ளும்? சாதாரணமாக. ஆனால் சுனாமி வந்தால்,வெடிச்சத்தம் கேட்டால் என்ன செய்யும்? ஓடும்.பயம் கொள்ளும் . பதுங்கும். அதுவே இயல்பு. நமக்கும் அதே விதிதானே . ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக நடக்க வேண்டிய ஒன்று. கஷ்டங்கள் வரும் போது வருந்தலாம். எப்படி வெளிவருவது என யோசிக்கலாம். மகிழ்ச்சியாக இருக்க காரணம் தேவை இல்லை. ஆனால் வருந்த, காரணம் வேண்டும். ஆனால் இப்போ எல்லாம் உல்ட்டா.

மகிழ்ச்சி அடைய மால் போக வேண்டி உள்ளது. வீட்டில் விசேஷம் ஏதும் வர வேண்டி உள்ளது. தோழர்களுடன் டூர் போக வேண்டி உள்ளது. உணவகத்தில் டின்னர் சாப்பிட போக வேண்டி உள்ளது. நல்ல உடை அணிந்து கொள்ள வேண்டி உள்ளது. மற்றவரைக் கவருமாறு பேச வேண்டி உள்ளது. மொத்தத்தில் சிரிக்க காரணம் தேட வேண்டி உள்ளது. அதையும் வெளியே தேட வேண்டி உள்ளது. ஆனால் , வருந்த,முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,வார்த்தை அம்புகள் வீச , அடாதன செய்ய காரணங்கள் தேவைப்படுவதில்லை. மலம் வெளியேற ஒரே வழி உள்ளது. மனமலங்கள் வாய்வழி வெளியேறுகின்றன. ஏனெனில் ஐம்புலன்களில் இரு செயல்கள் செய்ய வாய்க்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. பேச்சு,பேச்சு.கல்யாண வீட்டிலும் பேச்சு. மற்ற வீட்டிலும் பேச்சு. சாதாரணமாக காலைக் கடன் கழிக்கிறோமே அது போன்று நிகழும் இயல்புப் பேச்சல்ல. வீட்டில் சீரக ரசமும் கத்திரிக்காய் கூட்டும் சாப்பிட்டு, அது செரிமானமாகி மறுநாள் இயல்பாக வெளியேறும் விஷயம் போன்ற, வெளியேறின பின் அப்பாடா என நிம்மதி தருமே அந்தப் பேச்சல்ல. விடியும் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு போகாமல், சந்தோஷங்களுக்கு காரணம் தேடி, காரணமின்றி துன்பம் தேடி, ஹோட்டல் பரோட்டா சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வது போல், வேண்டாதன எண்ணி மனத்தைக் கெடுத்துக் கொண்டு செய்யும் வெர்பல் டயேரியா .

வயிற்றுப்போக்கு நிற்க வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். தானாக நிற்குமாக இருக்கலாம். ஆனால் நாளாகும். அதற்குள் Weak ஆகி விடுவோம். வெர்பல் டயேரியா நிற்க எண்ணங்களுக்கு,மனசுக்கு வைத்தியம் தேவையே. அது தானாக நிற்பதில்லை. நம் உயிர் உள்ள வரை நிற்பதில்லை. என்ன,வயிற்றுப்போக்கு நமக்குத் தெரியாது நிகழ வாய்ப்பில்லை. VERBAL DIARRHEA IS NOT A CONSCIOUS PHENOMENON , UNFORTUNATELY . சஞ்சய் மஞ்சரேக்கருக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்து செய்தியான , நான் முதல்முறையாகக் கேட்ட VERBAL DIARRHEA என்ற பிரயோகம் இந்த போஸ்ட்டின் மூலம். இந்த பிரயோகம் எனக்குப் புதிதே தவிர கருத்துக்கள் மிகவும் பழசு.

ரஞ்ஜனி த்யாகு  

MOTHER LEADS

Sunday, June 23, 2019

அவியல்

பல மாதங்களுக்குப் பின் கணினியைத் தொடுகிறேன். அதுதான் தலைப்பு இப்படி. எந்தக் காய் என்றே கண்டறிய இயலாது எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி ஒரு பதார்த்தம் பண்ணுவோமே,அதன் பெயர்தான் அவியல். அது போன்று எண்ண காய்களின் கலவையான ஒரு மன நிலை. அவியலில் கடைசியில் மோர் சேர்ப்போம். மோர் புளிப்பு சுவை. எல்லாம் நல்ல காய். எல்லாம் நல்ல சுவை. தனியாக சில காய் பிடிக்காதவர் கூட அவியலில் அதை பொருட்படுத்துவதில்லை. பீடிகை பலமாக உள்ளது. அல்லவா? ஆமாம். வாழ்வு சில கால கட்டங்களில் மனசுக்கு அவியல் தருகிறது. அதற்கு நம் ஜாதகத்தில் உள்ள கட்டங்கள் காரணம் என நான் நினைக்கவில்லை. வேறு ஏதோ காரணம். அந்தக் காரணங்களை சாதாரண மன நிலையில் இருந்து அறிவது அசாத்தியமான செயல். அமைதியாக இருக்க முடிந்தால், காரணம் புலப்படாவிடினும் அவியலை ருசித்து உண்ணும் வழியேனும் புலப்படும்.

பிரச்சினைகள் எல்லாம் அருள்தான். பிரச்சினை அற்ற வாழ்வு யோசனைகளுக்கும் அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்திக் கொள்வதற்கும் இடம் தருவதில்லை. வெறுமே நேர் கோட்டில் பயணிக்கும் வாழ்வு தேக்கம் காண்கிறது. சில மாதங்களாக ஏன் வீட்டிற்குள் ஒரு மேக மூட்டம்? மேகக் கூட்டம் வீட்டிற்குள்ளா மனமெனும் வீட்டிலா? வீட்டின் கான்க்ரீட்  கூரை மேகத்தை மறைத்து விடும். மனவீடு பொத்தல் நிறைந்த கூரை வீடு. வெளியே மேகம் கவிந்து கொண்டிருப்பின் ஓட்டை கூரையின் வழியாக அது நமக்குத் தெரியாது போவதில்லை.

 இரண்டு நாள் விட்டுத் தொடர்கிறேன். இப்படி அவியல் செய்தால் ஊசித்தான் போகும். என்ன செய்ய? என் நிலை அப்படி. வருத்தமாகச் சொல்லவில்லை. இயல்பாக சொல்கிறேன். ராகவனின் ஆட்டிசம் வேறு வேறாகத் தன்னை வெளிக் காட்டிக் கொள்கிறது. என்ன பண்ணனும் தெரியவில்லை. எப்படித் தெரியும்? என்னை நான் அறிவதல்லவோ முதல்? தன்னை அறிதலுக்கு மஹானாக இருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. தன்னை அறிதல் வாழ்க்கையின் கடைசிப் படி, ஏணியின் மேல் படி என்னும் வாதங்கள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. நான்,தான் என்பது ஆத்மா, அதை உணர்தல் என்ற complicated ஞானியர் உரைகள் புரியவில்லை. இந்தப் பிறவியில் ஒரு பெயர் கொண்டு நடமாடும் என் உடம்பினுள் உள்ள மனசை அதன் ஓட்டங்களை நெறிப்படுத்துவதுதான் என்னளவில் தானறிதல். அதை செய்யும் முன் என்ன முயன்றாலும் இன்னொருவருக்கு உதவியாக இருக்க இயலாது. அவ்வாறு நினைத்துக் கொண்டால் அது ப்ரமையே.

இந்த அவியல் பற்றின எண்ணங்களின் தொடர்பாய் இன்னும் ஏதோ யோசனைகள். பாலங்கள் என்றொரு கதை சிவசங்கரி எழுதினார்கள். மூன்று தலைமுறைகள் அலசப்பட்டு அப்படியொரு புதினம் இனி வருமா என்று நினைத்துக் கொள்வேன். என் பாட்டி தலைமுறை இன்னும் எளியதானதோ என்று தோன்றும். அல்லது இயல்பானதோ என்பது சரியான வழக்கு. அவர்களுக்கு வீடு மட்டுமே பிரதானம். அவர்கள் கட்டுப் படுத்தப் பட்டார்களா கட்டுப் பட்டார்களா நான் அறியேன். சந்தோஷங்களும் வருத்தங்களும் பொதுவாக இருந்தன. பகிர்தல் இருந்தது. என் பெற்றோர் தலைமுறை பற்றிக் கடைசியாகப் பேசுவேன். என் தலைமுறையினர் சந்தோஷங்களையும் சரி வருத்தங்களையும் சரி தங்களுக்குள் handle செய்து கொள்கிறார்கள். Facebook Whatsapp மூலம் உலகம் குடும்பமாகிப் போனது. குடும்ப உறவுகள் நெருக்கம் தொலைத்தன. வீட்டில் இருந்து விலகி தீவாகி, அதே போன்ற இன்னொரு தீவுடன் , எப்போது வேண்டுமானாலும் ஒடிந்து விழும் ஒரு weak ஆன பாலம் மூலம் இணைந்து சந்தோஷத்தை வெளியே ,இன்னும் வெளியே தேடி கானல் நீர் மகிழ்ச்சியில் திளைக்கும் தலைமுறை. நாம் விதிவிலக்காக இருந்தால் யோசனைகள் வரவே செய்யும். வருவதுதான் நல்லது. ஆனால் கடக்கும் போது கஷ்டமாக உள்ளது. கடவுள் தவிர யாரும் பதில் தர முடியாது என்பது மட்டும் இல்லை. பாலில் விழுந்த ஈ போல மற்றவர் பற்றி எல்லாம் சிந்திக்கக் கூட இயலாத இருவர்  ஒருவருக்கொருவர் என்ன சமாதானம் செய்து கொள்வார்கள்?

என் பெற்றோர் தலைமுறை திரிசங்கு சொர்கத்திற்கு சொந்தக்காரர்கள். அவர்களுக்கு சேர்ந்திருக்கும் சந்தோஷங்கள் தேவைப்படுகின்ற அளவு,விலகி இருக்க விரும்பும் நேரம் தனிமையும் தேவைப் படுகிறது. வீட்டின் பிரச்சினைகள் அவர்களால் தள்ளி இருந்தே பார்க்கப் படுகின்றன. அவர்களைக் குற்றம் சொல்ல இயலாது. ஒரு Transition Period ல் சிக்கிக் கொண்டவர்கள். மூன்று தலைமுறைகள் அருகருகே இருக்க நேர்ந்தால், போர்முனைதான் வாழ்க்கை. என்ன,வன்முறை சற்றே குறைந்த போர். எனக்குத் தெரிந்த யாரும் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்லவே மாட்டேன் என்கிறார்கள். ஏன்? அமைதிதானே இயல்பு? அது ஏன்,எப்போது தொலைகிறது? ஏன் சின்ன விஷயங்கள் யோசிக்கப் பட வேண்டும்? சாப்பாட்டில் அவியல் கண்டுபிடித்த மாதிரி, வேண்டாத எண்ணங்களின் கலவை எப்போது உண்டாகிறது? அதன் மூலம் என்ன? சாதாரண மனிதனின் மனமே புதிராக உள்ள போது ராகவன் மனதை அறிவது எப்படி என்று உள்ளே,எனக்குள்ளே போகிறேன்.

எதற்கு இந்த போஸ்ட் தொடங்கினேன்,தெரியாது. ஒரு பகிர்தல் செய்ய விரும்புகிறேன்.யாரும் எதற்கும் குழப்பம் அடைய  வேண்டாம் . ஹேஷ்யங்கள் செய்ய வேண்டாம் . மற்றவராக அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் வரை அலட்டிக் கொள்ள வேண்டாம் . அடுத்தவரிடம் காட்டும் அன்பையும் அவர்கள் வாழ்வில் தலையிடுவதையும் ஒன்று என நினைத்துக் கொள்ள வேண்டாம்.Like ,Dislike என்று கருத்துப் பதிவுகளை ஆதரித்து எல்லார் விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் உரிமை தந்து Facebook பண்ணி இருக்கிற கெடுதல் வார்த்தைகளில் விவரிக்க இயலாது.சுதாரகுநாதன் மகள் மைக்கேலை திருமணம் செய்வதை விமர்சிப்பது நம் முன்னேற்றத்திற்கு எவ்வாறு உதவப் போகிறது? முக்கியமாக ஒருவர் உண்மை நிலை அறியாது நாம் செய்யும் கணிப்புகளுக்கு சொல்வடிவம் தர வேண்டாம். பாம்பின் கால் பாம்பறியும். நாம் சக மனிதர்கள். அதனால் மனித மனத்தின் செயல்பாடுகள் உணர முடிவதால் எழுதினேன். நம்மை இப்படி ஒரு கண்ணாடிப் பேழை போல் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டால் , ஏதோ சிறு விரிசல் மூலம் வெளி உலக அதிர்வுகள் நுழைவதை  தவிர்க்க இயலுவதில்லை.அதுதான் சலனத்திற்குக் காரணம். ஆட்டிசம் போன்ற விடை அறியா வினைகள் உள்ள போது விடை தெரிந்த , அல்லது விடை அறிய இயன்ற வினைகளாவது நம்மைக் குழப்பாமல் இருக்கட்டுமே? வாழ்வு ஒரு புத்தகம். சிலருக்குக் கடினமான புத்தகம். சிலருக்கு எளிமையான புத்தகம்.ஆட்டிசம் திறக்க இயலாப் புத்தகம். புத்தகத்தை வடிவமைத்தவன்தான் அதைத் திறந்து எனக்கு வெளிச்சம் தரணும். காத்திருக்கிறேன். அதில் என்ன உள்ளது என்ற ஆவலுடன்!! மற்ற புத்தகங்கள் வாசிப்பது ஓரளவு எளிமை ஆகி விட்டது என்ற நன்றியுடன்.

ரஞ்ஜனி த்யாகு 

Mother Leads 

Saturday, February 23, 2019

ஆசைகளின் ஜனனமும் முடிவும்

உலகம் ஒரு சுழற்சியின் அடிப்படையில் இயங்குகிறது. சுழற்சியின் ஒரு நிலை மற்றொன்றிற்கு இட்டுச் செல்கிறது.  ஜனனமும் மரணமும்தான் பெரிய சுழற்சி. காலையும் மாலையும், இன்பமும் துன்பமும், காற்றும் வெயிலும், வேகமும் நிதானமும் தெளிவாகப் பிரிந்துள்ளன . ஒன்றுள்ள இடத்தில் மற்றது அநேகமாக இருப்பதில்லை. ஆனால் ஜனன மரணம் வேறுபடுகிறது. ஜனனத்தில் சில மரணங்களும் மரணத்தில் சில அழகிய ஜனனங்களும் நிகழ்வதுண்டு. தொடக்கம், முடிவு என்ற வார்த்தைகளை உபயோகித்துக் கொள்கிறேன். சில வார்த்தைகள் படிப்பது, எழுதுவது இரண்டுமே கடுமையாக இருப்பது போலத் தோன்றுகிறது. பௌதீகப் பிறப்பு, முடிவு பற்றினதில்லை கட்டுரை.  எண்ணங்களின் பிறப்பும் முடிவுமே . ஒரு வாழ்க்கை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவு முக்கியம் எண்ணங்களும்.  விளையாட்டில்லை .

சிற்றாசைகள் பிறக்கின்றன. ஓயாது மனத்தாய் சூல் கொண்ட பெண்ணாகவே இருக்கிறாள்.  பேறு காலம் ஒன்பது மாதம் இல்லை.  ஒன்பது வினாடிகளாகக் கூட இருக்கலாம்.  ஆசைக்  குழந்தையின் அளவைப் பொறுத்து அதன் கர்ப வாசம் அமையும்.  சில ஆசைக் குழந்தைகள் மனக் கருவறையில் நீண்டு தங்கி அம்மாவைப் பாடாய்ப் படுத்திவிடும். சில சரியான காலத்தில் பிறக்கும்.  வேறு சில குறை ப்ரஸவம் ஆகும்.  எப்படிப் பிறக்கினும் அந்த ஆசை என்ற குழந்தைக்கு நிர்ணயிக்கப் பட்ட வாழ்நாள் உண்டு. எப்படி தோன்றுவன எல்லாவற்றிற்கும் முடிவு உண்டோ அப்படி. ஆசைகள் பிறப்பதும்,நிறைவேறுவதும், நிறைவேறாது மடிவதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால், சில ஆசைகளின் முடிவில் நிகழும் ஜனனம், முக்கியமானது.  பேரரசர் அசோகருக்கு நிகழ்ந்தது போல. ஸ்வாமி அரவிந்தர் ஒரு வருட அலிப்பூர் சிறை வாசத்திற்குப் பின் சொல்கிறார், "ஒரு வருடம்,கானகத்தில், ஒரு ஆஸ்ரமத்தில் நான் இருந்ததாகச் சொல்வதே பொருத்தமாக இருக்கும்.  அது சிறைவாசம் அல்ல.  ஆங்கிலேயர்கள் கொண்ட காழ்ப்பின் ஒரே விளைவு நான் கடவுளைக் கண்டதுதான்"  என்று. ஸ்வாமி அரவிந்தருடைய யோகவாழ்வின் ஜனனம் நிகழ்ந்தது, அவருடைய தீவிர எண்ணங்களின் முடிவில். இதோ அவருடைய திரு வாக்கில்.


“I have spoken of a year's imprisonment. It would have been more appropriate to speak of a year's living in forest, in an ashram, hermitage. ... The only result of the wrath of the British Government was that I found God.”


ஒவ்வொரு சிற்றாசையின் முடிவையும் வேறொரு உயர்ந்த நிலையின் தொடக்கமாகப் பார்த்தால் மனச்சலனங்கள் அடங்குகின்றன.  பதட்டம் தரும் எல்லாம் ஆசைகள்தான்.  உள்ளும் புறமும் அமைதியே நிலைக்கட்டும் .  அல்ப விஷயங்கள் மீதான பற்றும் பிடிப்பும் நம்மிடம் இருந்து விடை பெறட்டும். மனத்தாய் சூல் கொள்ளும் காலம் முடியட்டும். அவளுக்கு வயசாகிப் போனது.  இன்னும் இன்னும் ஏன் ஆசைகள் பிறந்து மடிய வேண்டும்?  பிறந்து மடிந்த கோடானுகோடி ஆசைகளின் முடிவில் ஜனித்த சொற்ப நல்லவை நாம் உள்ளவரை நிலைக்கட்டும்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS

Sunday, February 17, 2019

அழியாத கோலங்கள்

தினப்படி வாசலில் நாம் அழியாத கோலங்கள் இடுவதில்லை. இந்தத் தலைமுறை கோலங்கள் இடுவதில்லை என்பது வேறு விஷயம். ஸ்டிக்கர் கோலம், ஸ்டிக்கர் பொட்டு , ரெடிமேட் உடை , இன்ஸ்டன்ட் உணவுகள், கோவிலில் மணி அடிக்கக் கூட மின்கருவி என்ற அவசர யுகம். அதை விடுங்கள். தலைப்பிற்கு வருவோம். தினம் வாசலில் போடும் கோலம், ஒரு நாளுக்கானது. மறு நாள்,வேறு புள்ளி,வேறு கோலம். ஒரு நாள் கூத்தாக செய்யும் செயல்களில் தவறுகள் நேர்ந்தால், அழித்துத் திருத்தலாம். அதாவது திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனாலும் சொல்கிறேன், அழிக்காமல்,தப்பு இல்லாமல் கோலம் இடுவது நன்று. கவனம் சிதறாமல் கோலம் இடுவது நன்று. அவ்வாறு வாழ்வது அதனினும் நன்று. அழியாத கோலங்கள் எங்கு இடுவோம்? கோவில்களில்? திருவிழாக்கள் சமயம்?பெயிண்ட்டால் ?  என்ன தெரிகிறது? அழியாத,சற்றே நிலையான விஷயங்கள் சிறப்பு வாய்ந்தவை. லேசில் அழிக்க முடியாத கோலங்களை உரிய இடத்தில்தான் இடலாம். ஆனால் வாய் எனும் ஆயுதம் கொண்டு மக்கள் மனம் என்ற மைதானத்தில் பெயிண்ட் கோலம் போன்று சுடுசொற்களால் கோலம் வரைவதை சகஜமாக செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் தப்பு கூட இல்லை. ஒரு ஸ்வபாவம். 

நம் ஒவ்வொருவர் மனதிலும் அழியாத கோலங்கள் உண்டு. நாமும் லேசுப்பட்டவர் இல்லை. பெயிண்டும் தூரிகையுமாய் சுற்றுவோர்தான். தூரிகையை உபயோகிக்க ஒரு முறைக்கிருமுறை யோசித்தால் நல்லவர்கள். இல்லையெனில் பொல்லாதவர்கள். சில நேரம் ஒரு கோடு வரைந்து விட்டு உடனே அழிக்க முயல்வோம். முடியாது. பக்கத்தில் வேறு கோடு இழுத்து கோலத்தை சரி பண்ணி விட்டதாக நினைக்கிறோம். ஆனால் இல்லை. கடுமையான பேச்சும், அவசரமாகவே எடுக்கும் முடிவுகளும் எனக்கு வேண்டாமே. நாளை சரியாகப் போகிற ஒன்றைப் பற்றிய தவறான யூகங்களும் , நாளை தவறாகப் போகிற ஒன்றைப் பற்றின வீண் ஜம்பங்களும் தவிர்க்க உடலுடன் சேர்ந்து உள்ளமும் வளர வேண்டும். வழக்கம் போல் போஸ்ட்டின் வித்து சுற்றி நடக்கும் , நடந்த நிகழ்வே. அதற்கு விரிவாக்கம் தர எனக்கு பயம் இல்லை. ஆனால் விருப்பம் இல்லை. உங்களுக்கு அறிந்து கொள்வதில் லாபமும் இல்லை. எனக்கொரு லாபம் உண்டு. பாடம் உண்டு. தூரிகையுடன் அழியாத தப்புக் கோலம் இட வருபவரைக் கண்டால் என் மனக்கோவில் மூடிக் .கொள்ளும். தன்னைக் காத்துக் கொள்ளும்.

நான் கடுமையானவர்கள் நிலையில் இருந்து கொண்டு யோசிக்கணும் என்று என் நலம் விழைவோர் கூறுகிறார்கள். ஏன்? எதற்காக? பகவான் கிருஷ்ணர் குருக்ஷேத்திர போருக்கு முன் அர்ஜுனன் மனநிலையில் இருந்து சிந்தித்திருந்தால் அது கீதைக்கு வழிகோலுமா? பலவீனத்தின் மறுபக்கம் கடுமை. ஸ்வாமி விவேகானந்தருக்கு மட்டும் இல்லை, எனக்கும் பலவீனம் மரணமே. கடுமை காட்டுபவர் நிலையில் இருந்து யோசித்தால், நான் தவறின் பக்கம் நிற்கிறேன். அது தேவை இல்லை. நிஜப்போரில் அர்ஜுனன் வில்லெடுத்தான். மனப்போரில் கதவை மூடுவதுதான் சரி என எனக்குள் உள்ள கடவுள் சொல்கிறார். அன்பிருக்கும்  இடமே சிவன் இருக்கும் இடம். சிவன் உள்ள இடத்தில், கடுமைக்கிடம் இல்லை. பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Monday, February 11, 2019

ஒரு ரூபாய்

ஒரு ரூபாய்க்கு மதிப்பு எவ்வளவு? குழந்தைக்கு அது ஒரு சாக்லேட். அம்மா உணவகத்தில் இரண்டு இட்லி. பக்கத்து வீட்டு மாமிக்கு வெற்றிலை பாக்குடன் தரும் நாணயம். சிக்னல் சமீபம் கையேந்துபவருக்கு ஒரு நாள் கிடைக்கும் பணத்தில் எத்தனையிலோ ஒரு பங்கு. கிரிக்கெட் வீரர்களுக்கு டாஸ் போடப் பயன்படும் கருவி. கஞ்சனுக்கு கோவில் உண்டியலுக்கென ஒதுக்கப்பட்ட காசு. பள்ளி குழந்தைகளுக்கு சின்ன வட்டம் வரையப் பயன்படும் பொருள். கோவில் யானைக்கு ஆசீர்வாதம் செய்ய,வேடிக்கைக்காகத் தரும் காசு. ஆயிரம்,லட்சம், கோடிகளில் புரள்வோருக்கோ அது செல்லாக் காசு. ஆனால், என் குழந்தை ராகவனுக்கோ அது பெரிய பணம். அவனுக்கு ஆட்டிசம். அவன் உலகில் பணம் என்றால் ஒரு ரூபாய். எந்த நாணயம், ரூபாய் நோட்டு காட்டினாலும் ஒரு ரூபாய் என்று கூறி சிரிப்பான். எவ்வளவு நிம்மதி தெரியுமா?  Life Insurance செய்து கொண்டு விட்டதால் மட்டும் எதிர்காலம் பாதுகாப்பாகி விட்டதாய் நினைப்பவர்களுக்கு ஒரு ரூபாயின் மதிப்பு தெரிவது கஷ்டம். ஒரு ரூபாய் என்ற எண்ணம் பெரியது. அதைக் கொண்டு நிம்மதி என்ற விலை மதிப்பற்ற ஒரு பொருளை வாங்கலாம்.

எது நிஜ Insurance ? நாம் செய்து விட்டோமா? இல்லை. இருபது வயது தாண்டும் முன் Insurance Policy எடுக்கலையா இன்னும் என்கிறோம். ஐம்பது வயது வரை மிகவும் மேலோட்டமானதொரு வாழ்வை வாழ்ந்து விடுகிறோம். உள்ளுக்குள் மைல் கணக்கில் கடக்க வேண்டிய தொலைவு உள்ள போது , வெளியே, இன்னும் வெளியே பயணப்பட்டுக் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாள் போகட்டும், நாளை, அதற்கு மறுநாள், இதோ அடுத்த வாரம், இதோ அடுத்த மாதம் முதல் எல்லாம் சரி செய்து விடலாம் என்ற தப்பு கணக்கில் நாட்கள் நகர்கின்றன. திரும்பும் முன் முதுமை வாயிலில் வந்து காத்து நிற்கிறது. சூப்பர் மார்க்கெட்டில், ஒரு குட்டிப் பையன், " பாட்டி, கொஞ்சம் வழி விடறீங்களா? " என்று கேட்கும் குரல், ஆட்டோக்காரர், " தாத்தா, நீங்க வயசானவங்க. உங்க கிட்ட ஜாஸ்தி கேட்பேனா?" என்று கேட்கும் குரல் கோபம் உண்டாக்கினால், எதுவும் பண்ணாமல் காலம் கடந்து கொண்டுள்ளது என்று பொருள். வாழ்வாங்கு வாழ்வோருக்கு வயது ஒரு எண். அவ்வளவே.

வாழ்வு என்பது தொடர்பு கொள்ளுதல் என்ற வாசகம் திரு பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் படித்தேன். தொடர்பு என்ற சொல் ஆழம் நிறைந்தது. நம்மைச் சுற்றியுள்ள உலகுடன் உள்ள உறவின் பெயர் தொடர்பு. அது தாமரை இலைக்கும் தண்ணீருக்கும் உள்ளது போல, ஒரு ரூபாய் நோக்கு  போல பிணைத்தும் பிணைக்காமலும் இருப்பின் சிறப்பு. நம்முடைய குறுகிய Intelligence ஐ வைத்துக் கொண்டு எல்லோரையும் பார்த்துக் கொண்டு யார் கையிலோ உள்ள கயிறில் அவர்கள் இட்ட முடிச்சை நான் அவிழ்க்கிறேன் என்று எண்ணம் கொண்டு, ஒவ்வொரு நாள் மனதில் புதுப் புது பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு,ஏற்றிக் கொண்டு , அந்தக் குறிப்பிட்ட நாளில் நடக்கும் ஒரு நிகழ்வை கண் அருகே வைத்துப் பார்த்துக் கொண்டு, அதாவது மற்ற எதையும் கண்ணால் பார்க்கவே முடியாதபடி ஒரு பக்கக் காக்கா பார்வை பார்த்துக் கொண்டு, அடடே நிமிஷமாய் ஜனவரியும் பிப்ரவரியும் கடந்து விட்டதே, இப்போதுதான் வருஷம் பிறந்தார் போல இருந்தது என்று புலம்பி விட்டு எஞ்சிய பத்து மாதங்களையும் அப்படியே கழித்தால், நிஜ insurance செய்யும் காலங்களை மெத்தனமாகக் கடக்கிறோம் என்றே பொருள்.  

எல்லாம் ஒரு ரூபாய் எண்ணம் எவ்வாறு உதவும்? பிங்க் கலர் 2000 ரூபாய், பச்சை நிற 500 ரூபாய், ஆரஞ்சு கலர் 200 ரூபாய் ஆகிய எதைக் கொண்டும் பொருள் வாங்கலாம். வெவ்வேறு பொருள். பொருள் வாங்குவது தவிர ரூபாயின் பயன் என்ன? இறுதிப் பலன் என்ன என்று யோசித்தால் எல்லாம் ஒரு ரூபாய். ஒரே ரூபாய். அதே போல், வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே பலன்தான். நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது. தினப்படி நிகழ்வுகளின் முக்கியத்துவம் அவ்வளவே. சந்தோஷத்தையும் வருத்தங்களையும்  வெளியிடாமல் இருப்பதல்ல பொருள். கையாள்வதில் தேவைப்படும் நிதானம். அது Insurance தான். அடுத்த நிமிட ஆச்சரியங்கள் தெரியாத வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. Life Insurance ம் Medical Insurance ம் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயத்தில் செய்து கொள்வது. ஆனால் ஒரு ரூபாய் Insurance நல்லது நடக்கும் என்ற உறுதியில் செய்து கொள்வது. உறுதியான அஸ்திவாரத்தின் மேல் கட்டிடம் எழும்புவதே சரி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Wednesday, January 30, 2019

தர்மம் பற்றிய குழப்பங்கள்

எது தர்மம்? ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றா? அல்லது அது பொதுச் சொல்லா? தர்மம் என்று எல்லோருக்கும் பொதுவாக எதுவும் இல்லையோ என்று எண்ணுகிறேன். எனக்கு தர்மம் என்ற தலைப்பின் கீழ் வருவன சிலருக்கு தவறாகப் படுகிறது. அவர்கள் தருமம் என்னை ஆயாசப் படுத்துகிறது. மனமறிந்து தீங்கு செய்யாமை , குரல் உயர்த்தாமை, சோர்வடையாமை , பயமில்லாமை எல்லாம் எனக்கு தர்மம் என்ற தலைப்பில் வருகின்றன. உண்மையாய் மனதில் களங்கம் அற்று இருக்க வேண்டுமே தவிர அப்படிப் பட்ட இருப்பை மற்றவரை உணரச் செய்வது என் தர்மத்தில் இல்லை. தப்பைப் பார்த்துக் கொண்டு உரக்க வெளியிடத் தயங்குவது என் தர்மத்தில் இல்லை. நாடகத் தனம் என்னை சோர்வாக்கவே செய்கிறது. சண்டைக்குத் தயாராய் இருப்பவர் என்னை பயம் கொள்ளச் செய்கிறார்கள். சில நாட்களாக மனத்தராசு இரு பக்கமும் ஏறி ஏறி இறங்குகிறது. சமநிலைக்கு வர விழைகிறது.மேசை மேல் உள்ள ஒரு பொருளை எடுத்து வேறிடத்தில் வைப்பது போல மனத்தராசின் தட்டில் உட்கார்ந்துள்ள சில  கனமானவற்றை எடுத்து கண்காணாத இடத்தில் வைக்க விருப்பம். அது கஷ்டமா?  ஆம் என்றால் ஏன் கஷ்டம்?

இன்று பிப்ரவரி என்ற குழந்தை ஜனனம். பல வருஷங்கள் முன் அரவிந்த அன்னை என்ற தெய்வக்  குழந்தையின் ஜனனம் நிகழ்ந்த மாதம். மனம் பின்னோக்கி நகரும் விமானம் ஏறி பிரான்ஸ்  சென்றுள்ளது. இன்னும் திரும்பவில்லை. திரும்பியே தீரும். சஞ்சரித்துக் கொண்டே உள்ள பயணிதானே மனம்!!  முதல் பத்தியில் சொன்ன கனத்தை இறக்கி வைத்தால் மேலே ஏறுவது எளிது. மூட்டை சுமந்து ஏறுவது கஷ்டம். யார் அதை நம் மீது ஏற்றி வைப்பது? யாரோதானே? ஏற்றும் முன் மறுப்பது எளிது. தெரியாமல், கனம் அறியாமல் ஏற்றிக் கொண்டு விட்டாலும், இறக்குவதற்கு யார் அனுமதி வேண்டும்? எப்போ வேண்டுமோ இறக்கி விடலாம். எவ்வளவு துரிதமாக செய்கிறோமோ அவ்வளவு நல்லது.  செய்ய ஊக்கம் தேவை. அது இல்லாமல்தான், மனிதர்களையும், நிகழ்வுகளையும் சுமந்து திரிகிறோம். விமானத்திற்குள் பெரிய மூட்டைகளுக்கு அனுமதி இல்லை. கார்கோவில் போட்டால்தான் நாம் பயணப் படலாம். உயர்ந்த நிலைகள் அடைய, விட வேண்டிய பொருள்கள் உண்டு, அவை எதுவானாலும்.


என்னிடம் நான் கொண்ட சுய அன்பே பெரிய குறுக்கீடாய் உள்ளது. கழிவிரக்கம் . அதில் இருந்து மீண்டால் மட்டுமே விமோசனம் என உணர்கிறேன். நம் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது நம் மேல் நாமே கொள்ளும் அன்பு. நமக்கு நாமே தந்து கொள்ளும் முக்கியத்துவம். அதை சற்று விலக்கிப் பார்த்தால், நாடகத்தனமாக்காது  பார்த்தால் உண்மை தெரியும். எதற்கு நாடகம் ஆடுகிறோம், எல்லாவற்றையும் ஊதி? நாம் வாழ்வில் நடிக்காதிருந்தால், தானாக நாடகத் தனமான நிகழ்வுகள் நம் வாழ்வினின்று விடை பெறும். மற்றவரை விமர்சிக்க எந்த அளவு நாம் சுத்தமாக இருக்க வேண்டும்? ஏன் நான் சரி? இன்னொருவர் தப்பு? யார் அந்த இன்னொருவர்? என் போல அன்றி மாற்றி யோசிப்பவர்தானே? எல்லாம் நான். எனது. அங்கேதான் குழப்பம். எனதில்லாத ஒன்று என்னை பாதிப்பதில்லை. உண்மையில் எது என் சொந்தம்?  உடம்பு கூட சொந்தம் இல்லை எனும் போது ஏன் மனத்தராசின் முள் ஆடணும்? பார்க்கலாம். முயலலாம்.

Saturday, January 26, 2019

துக்கடா

கச்சேரிக்குப் பின் பாடப்படும் துக்கடாக்கள் போல் சில மாதங்கள் வரிசையாக நிகழ்வுகள். ஒவ்வொன்றும் வேறு வேறு பிரிவைச் சேர்ந்தவை. தனித்தனி போஸ்ட்டாக வலிமை அற்ற நிகழ்வுகள். அதனால் எல்லாம் ஒரு போஸ்டில் அடங்கப் போகின்றன. தலைப்பு சரிதானே? துக்கடாக்களுக்கு இலக்கணப் படி வரிசை, அதாவது ஆர்டர் இல்லை. அது போல இந்த போஸ்டின் contents  க்கு இலக்கணம் இல்லை. குரங்கு மாதிரி தாவ , என் மனக்குரங்கின் வேகத்திற்குத் தாவ என் எழுத்துக்கும் உரிமை உண்டு. மாதத்தின் முதல் பாதி பொங்கல் கொண்டாட்டங்கள். அதற்கான திட்டமிடல். திட்டமிடல் என்பது முக்கியமாக சாப்பாடுதான். சாமிக்கு நைவேத்தியம் என்று சொல்லி, வயிறும் குடலும் என்னை விட்டு விடேன் என்று கெஞ்சும் அளவு  உணவு. எனக்கு சென்ற தலைமுறையினரின் பல செயல்களுக்கு விளக்கம் தேவையாய் உள்ளது. இப்போது நல்ல நினைவுகளுடன் உள்ள பெரியவர்கள் தரும் விளக்கங்கள் எதுவும் உடன்பாடாயில்லை. அட, பூஜை புனஸ்காரம் அதெல்லாம் பற்றி சொல்வதாவது தேவலை. போகிக்கு போளி , பொங்கலுக்கு வடை, காணும் பொங்கலுக்கு கலந்த சாதம் இதற்கெல்லாம் என்ன விளக்கம்? இந்த வருடம் அரசாங்கம் வழங்கும் 1000 ரூபாய்க்கு ஆலாய்ப் பறந்து அலை மோதி , அந்த 1000 ரூபாய்க்கு பொங்கல் தவிர 1008 செலவு காத்திருக்கும் ஏழை மக்களைக் கேட்டால் தெரியும். அவர்களிடம் இருந்து சூரிய பகவான் தன்னை மறைத்துக் கொண்டு விட்டாரோ, வடையும் பொங்கலும் படைக்காததற்கு? 

முதல் பாதி இவ்வாறான எண்ண ஓட்டம் என்றால் இரண்டாம் பாதி உடல்நலக் குறைவுகளும் பெரிய மருத்துவ மனைகளும், நெருங்கியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பின் அமைதி காத்து கடவுளிடம் மட்டும் பேச்சுவார்த்தை நிகழ்த்துவதும் பற்றியது. பயம்தான் சார்பை ஏற்படுத்தும் சக்தி. எதைக் கண்டு பயம் கொள்கிறோமோ அது நம்மை அடிமையாக்குகிறது. தன்பயம் நம் அனைவருக்கும் இருக்கும்,சில விதிவிலக்குகள் நீங்கலாக. அந்த தன்பயம் ஒரு எல்லையைக் கடக்கும் போது உடல் தன் இயற்கையான குணப்படுத்திக் கொள்ளும் சக்தியை அதாவது ஹீலிங் பவரை இழக்கிறது. பயம் என்ற சாத்தான் இனி பார்த்துக் கொள்ளும், நாம் சற்று ஓய்வெடுப்போம் என்று இயற்கை கம் மென்று இருந்து விடுகிறது. அதுதான் பெரியமருத்துவமனைகளுக்கு வசதியான வியாபாரம் . எனக்கு உயிர் காக்கும் மருத்துவத் தொழில் மீதும் மருத்துவர்கள் மீதும் அபார மரியாதை உண்டு. நவீன மருத்துவத்தில்,போய்க் கொண்டிருக்கிற உயிரை சத்யவான் சாவித்ரி போல மீட்டு வரும் மருத்துவர்களுக்கு வணக்கம். ஆனால்,உண்மை மருத்துவர்கள் அருகி, மருத்துவ வியாபாரம் பெருகி விட்டதையே இன்றைய நிலையில் காண முடிகிறது. உணர முடிகிறது. கண்டிஷன் ஸ்டேபிள் என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனை வாசத்தை நீட்டிக் கொண்டே போகும் போது ஸ்டேபிள் என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை அகராதியில் தேடணுமோ என்று நினைக்கிறேன். மருத்துவமனையில் உள்ளது என் மாமனார் என்பதால் என்னால் இதற்கு மேல் அழுத்தமாய் எழுத இயலவில்லை. Authentic ஆக சொல்ல அத்தாட்சியும் இல்லை. ஏனென்றால் பயத்தால் வழி நடத்தப் பட்டுக் கொண்டுள்ளோம். பெரிய மருத்துவமனைகள் சரியானவையா என யோசிக்க நம் பயங்கள் இடம் தராது.

அடுத்த துக்கடா உணர்வு சம்பந்தமானது. ஒரு இக்கட்டான நேரம் அல்லது நிகழ்வு நம் உணர்வுகளைக் கட்டவிழ்த்து விட தரப்பட்ட லைசென்ஸ் அல்ல. நிச்சயமாக அல்ல. நம் உண்மையான பலங்களை நமக்கே உணர்த்த வரும் இறைவன் வரம். அப்படித்தான் அணுக வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மற்றவர் மேல் கொள்ளும் கோபமோ, நம் பரபரப்போ, வருத்தமோ, நம் ஊகங்களோ ஒருவரை குணப்படுத்தும் என்றால் அதெல்லாவற்றையுமே செய்யலாமே? நமக்கு உற்ற ஒருவர் துன்ப பட்டுக் கொண்டுள்ள போது மற்ற எண்ண ஓட்டங்கள் அடங்கி அல்லவோ போகும்? விலங்கினங்களில் கூடக் காணப்படும் சில உணர்வுகள் நம்மிடம் இல்லை எனவும் உணர்கிறேன். தன் இனம் சேர்ந்த ஜீவன் ஒன்று Distress ல் இருப்பின்,அந்த இனம் சேர்ந்த மற்ற விலங்குகள்,பறவைகள் அதனை விட்டு நகர்வதில்லை. ஆனால் மனிதனுக்கு தன் சுகமே ப்ரதானம்.  மனம் குறுக்கிடுவதால் மனிதன் குழப்பவாதிதான். ஒரு காக்கை, இன்னொரு காக்கை தன் தர்மத்தை செய்கிறதா , என்று கவலை கொள்வதில்லை. கமெண்ட் அடிப்பதில்லை. ஆனால் நாம் சும்மா இருப்பதில்லை. எது ஸ்வதர்மம் என்று நமக்கு எதுவும் தெரியாது. நாமே வகுத்துக் கொண்ட ஒன்றை சரி என்று கருதி பிறர் செயல்களுக்கு நீதி தேவன் போல் செயல்படுகிறோம். தமாஷாக இல்லை? விலங்கினங்களின் தர்மம் பொது தர்மம். தன் இனம் சேர்ந்த ஒரு ஜீவன் துன்பத்தை அது தன் துன்பமாகப் பார்க்கிறது. மனிதன் அப்படி இல்லை. என்னைச் சார்ந்த ஒருவரின் உடல்நிலை உன்னைத் தொடுமா என்ற சந்தேகம். சந்தேகம் கொள்வோரை சந்தேகப்பிராணி என்கிறோம். உண்மையில் பிராணிக்கு சந்தேகம் கிடையாது. சரியான மனிதன் மனிதம் நிறைந்தவன் அல்லவோ? உயிர்களில் அவனால் வித்யாசம் காண இயலாது. உண்மையான உள்ளங்களைப் புரிந்து கொள்ள உண்மையாய் இருக்க வேண்டும். இயல்பாய், சாதாரணமாய் இருக்கும் போது வாக்கு தடிக்காது . அமைதி மாறாது. தவறுகள் நேர்ந்தால் அவற்றில் தன் பங்கு என்ன எனப் பார்க்கத் தோன்றுமே அன்றி மற்றவரைப் பற்றி எதுவும் தவறாகக் கூற, ஏன் எண்ணக்  கூடத் தோன்றாது.


நிறைய துக்கடாக்கள் ஆயிற்று. இன்று கச்சேரி நிறைவு பெற்றது. கடவுள் அருள் துணை நின்றால் வேறு தலைப்பில் புதுக் கச்சேரி செய்யலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Thursday, January 10, 2019

சாந்தி

சாந்தி. சாந்தி என்றால் அமைதி. இந்த போஸ்ட் அமைதி பற்றியது அல்ல. அமைதியை தன்னுடையதாக்கிக் கொண்ட ஒரு பெண் பற்றியது. சாந்தி என் பள்ளித் தோழி. என் எழுதும் ஆசைக்கு அவள் ஒரு முக்கியக் காரணம் என்பேன். பள்ளிக்கு என்றாவது லீவ் போடும் போதெல்லாம் மாலை குறைந்தது ஒரு ஐந்து பக்கக் கடிதம் யார் மூலமாவது எனக்கு வரும். அவளுடன் தொடர்பில் இருந்த பள்ளி நாட்களில் நான் லீவ் போட்டு, சாந்தி எனக்குக் கடிதம் அனுப்பாத நாள் ஒன்று கூட இருந்ததில்லை. பள்ளியின் ஒவ்வொரு பிரிவு வேளையிலும் நடந்த அனைத்து சம்பவங்களும், என் absence ஐ அவள் உணர்ந்ததும் அழகு தமிழில் விவரிக்கப் பட்டிருக்கும். அந்தக் கடிதங்கள் படிக்கவே லீவ் போடலாம் என்று தோன்றும். ஆனால் நான் செய்த தப்பு என்னவென்றால் அதை செய்ய வேண்டிய அளவு recognize செய்யாதது. வேண்டுமென்று நான் அப்படி இருக்கவில்லை. எனக்குத் தெரியவில்லை. ஏனோ தெரியவில்லை. சாந்தியின் தொடர்பு விட்டுப் போன பின்தான் நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று உணர்ந்தேன். என் புற வெளிப்பாடுகள் மைனஸ் ஆக இருப்பினும் அவளால் எப்படி ஒரு முறை கூட என்னிடம் வேறு முகம் காட்ட முடியவில்லை என்பது பூவுக்குள் மறைந்திருக்கும் கனிக் கூட்டம் போன்றதொரு அதிசயமே. புறம் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் என் அகத்தில் அவள் மேல் ஒரு அதீத அன்பு இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் இவ்வளவு ஆண்டுகள் சென்ற பின் திருச்சி சென்ற போது அவளைத் தேடத் தோன்றி இருக்காது. கண்டு பிடித்த பின் போஸ்ட் எழுத தோன்றி இருக்காது.

ஆனால் சமையல், வீட்டு வேலைகள் என்றே பெரும் பொழுதை செலவிடும் பெண்ணான எனக்கு போஸ்ட் எழுத உட்கார்ந்தே ஆகணும் என்பதற்கு ஒரு வலுவான நிகழ்வு தேவை. ஆம். உள்ளது. சென்ற வாரம் அவளிடம் இருந்து ஒரு வாட்சப் செய்தி வந்தது. அவள் கணவருக்கு திடீரென பைபாஸ் ஆப்பரேஷன் ஆகி மருத்துவமனையில் உள்ளதாக. மனதில் பிரார்த்தனைகளுடன் தொலை பேசினேன். வழக்கமான அமைதியுடன் அவள் குரல் கேட்டது. தொடங்கும் போதே,  "நல்லாருக்காருப்பா" என்றாள் . Iron women என்று பலர் பற்றி படிக்கிறோம். கேட்கிறோம். எப்போதாவதுதான் தொடர்பில் வருகிறோம். Full of Positive Energy . அதுதான் சாந்தி. "அவரை ஆப்பரேஷன் தியேட்டர் அனுப்பி விட்டு வங்கிக்கு வந்து விட்டேன். எல்லாம் நன்றாக நடக்கும். வார்டில் கொண்டுவிடும் முன் திரும்பி விட்டேன். அன்று நான் cash பார்க்க வேண்டும். எல்லோரும்,' இன்று உன் மனசு சரியாக உள்ளதா, கேஷ் handle செய்ய இயலுமா' என்று உதவ வந்தார்கள். நானே பார்த்துக் கொள்கிறேன்,அது வேறு இது வேறு. நான் உடலும் மனமும் நன்றாக இருக்கிறேன் " என்று கூறி விட்டேன் என்று வெகு இயல்பாக,  "இன்று வெண்டைக்காய் பொரியல் செய்தேன் " என்பது போல் இயல்பாகக் கூறினாள்.மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.  நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிதென்கிறார் வள்ளுவர். அன்றே சொன்னேன்." சாந்தி, நீ போஸ்டில் எழுதப் பட வேண்டிய பெண் "என்று. இன்றுதான் நேரம் கிடைத்தது.

சில சமயம், பலர் பற்றியும், பல நேரம் சிலர் பற்றியும் விமர்சனங்கள் செய்கிறோம். என் இடத்தில் இருந்தால் தெரியும், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்ற வழக்குகள் உண்டு. மலைகள் எங்கிருந்தாலும் அசைவதில்லை. பிரச்சினைகள் இல்லாத வாழ்வும் இல்லை.சாந்தி சொன்ன இன்னொன்று. "என்ன, எல்லாம் அனுபவித்தாயிற்று. இனி ஒவ்வொரு நாளையும் அமைந்தவாறு நடத்தாமல் ஏன் கவலைப் பட்டு காலத்தை ஓட்ட வேண்டும்? ". மிகவும் சரி. ஐம்பது  + வயதில் அவள் மனதில் தங்கின அமைதி ரசிக்க வேண்டிய ஒன்று. சாந்தியுடையது காரணப் பெயரோ? வாழ்க வளமுடன் சாந்தி.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...