Friday, January 29, 2021

24 மணி நேரம்

 இன்று காலை கண் முழித்தது என் சகோதரிக்கு பேரன் பிறந்த செய்தியுடன். சந்தோஷம். குழந்தை பிறப்பைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம். ஆனால் வாழ்வைக் கொண்டாடுகிறோமா என்றால் இல்லை. யார் வாழ்வையோ கொண்டாடி, சுயம் தொலைத்து வழி நடத்தப்பட்டு, மற்றவரை வழி நடத்தி, வாழும் நாட்களை நகர்த்துகிறோம் என்றே படுகிறது. சத்ரபதி சிவாஜியின் வாழ்வு சரித்திரம் என்றால் என் வாழ்வும் சரித்திரமே. நான் சரித்திரம் ஆகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டா குழந்தை பிறக்கிறது? இல்லையே. பத்து வயது வரை குழந்தைகள் சரி. அல்ஜீப்ராவும் சரித்திரமும் அறிவியலும் அறியாத பிள்ளை முட்டாள் இல்லை. தன்னை அறியாதவர்களே முட்டாள். இன்று பூத்த அந்த குழந்தை சரித்திரம் படைக்கட்டும்.

மூன்று நாளாக பொங்கல் கொண்டாட்டங்கள்.பொங்கலுக்கு முதல் நாள் என் மாமனார் உடல் நிலை மோசமானது. சற்று பயம் அளித்தது. ஏன் பயம். நம்மால் அறிய முடியாதனவற்றை பற்றின ஹேஷ்யங்கள் செய்வதால் பயம். ஏன் மனிதமனம் இவ்வாறு இயங்குகிறது. அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன். நல்லது பற்றின சந்தேகம். அல்லாதன பற்றின கவலை. இந்தக் கூட்டு எண்ணக் கலவையா வாழ்க்கை. சாலை ஓரம் பஞ்சடைந்த கண்ணுடன் சில்லறைப் பொருள் விற்கும் சிறுமி நாளை பொங்கல் பண்டிகை என அறிவாளா. எதனால் அவள் சாலை ஓரம் அலைகிறாள். நாம் ஏன் காணாதது போல வேறு திசை நோக்கி கார் கண்ணாடியை திறந்து தொலைக்காதே என்று குழந்தைகளுக்கு நல்ல பாலபாடம் அளிக்கிறோம். இவை எல்லாம் யோசிக்க வேண்டியவையே. உலக அரங்கில் நம் இடத்தை மற்றவருடன் ஒப்பு நோக்குவது இயல்பாக நிகழ வேண்டிய ஒன்றே. எத்தனை கிடைத்துள்ளது. நாம் அடைந்தவற்றைப் பற்றிக் கேள்வி எழுவதில்லை நமக்கு. பிறருக்குக் கிடைத்த ஒன்று நமக்குக் கிடைக்கவில்லை என்ற எண்ணம் ஏக்கம் அளிக்கிறது. பலருக்கு கிடைக்காத ஒன்று ஏன் எனக்கு இவ்வளவு சுலபமாய்க் கிடைத்தது என்ற உள் தேடல் ஏற்றம் தருகிறது.

நிமிட நேரத்தில் வாழ்வின் காட்சிகள் மாறும் அதிசயம்.இன்று மாமியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவர்களை சுற்றி நாடகங்கள் நடப்பதை பார்க்கிறேன். உலகம் சுயநலம் நிறைந்ததே என உணர்கிறேன். நான் இந்த உலகத்தை சேர்ந்தவளே. என்னை உயர்த்திக்கொண்டோ தனிமைப்படுத்திக் கொண்டோ எதுவும் பேசவில்லை. நான் எழுதிக் கொண்டுள்ளது காந்திஜியின் சத்திய சோதனை போன்ற சுயசரிதம் அல்ல. அதனால் எந்த Declaration ம் தரவில்லையே தவிர என்னைப் பற்றியும் மற்றவர் நினைவுகள் எப்படியும் இருக்கலாம். ஆழமாக சிந்தித்தால் அன்றி நம் தவறுகள் நமக்குப் புலப்படுவதில்லை. மருத்துவமனையில் ஒருவர் உள்ள போதே சுற்றங்கள் அவர்களை சிந்தையில் இருந்தும் விலக்கி அல்லது சற்று தள்ளியாவது வைத்து வடுகிறார்கள். கடவுள் தீர்ப்பு எப்படியோ மனிதர்கள் அவர்கள் வாழ்ந்தது போதும் என்று தீர்மானிக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு சம்பளம் நின்று விட்டால் என்ன ஆகும் என்ற ஞாயமான கவலை. அதனால் அவள் அவர்கள் திரும்பி விட்டால் போதும் என்கிறாள். அசையாமல் அவர்கள் இருப்பதில் அவளுக்குக் கவலை இல்லை. உண்மையில் வேலை இன்னும் எளிது. 

சுற்றங்களுக்கு அடுத்தடுத்த வேலைகள் தாமதப்படக் கூடாதே என்ற பயம். அதை வெளிக்காட்ட இன்னும் பயம். ஒருவர் உயிருடன் உள்ள போதே அடுத்த நம் வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல் இவர்கள் நகர்வார்களா என்ற கணக்குப் போடும் ஜீவன் மனிதன் மட்டுமே. பரிதாபம். ஏன் நமக்கு எதையும் முழுமையாகப் பண்ணத் தெரியவில்லை. சந்தோஷம் வரும் போது குதூகலிப்போம். வருத்தம் வரும் போது அதையும் வாய் மூடி அனுபவிக்கத்தானே வேண்டும். மனசு இருப்பதால் ஓயாத கணக்கு. தேவையா. உயிருக்குப் போராடும் ஆத்மா இந்த அதிர்வுகள் தாண்டிப் பிழைக்க வேண்டும். அவர்கள் நலமுடன் திரும்பி வந்தால் தான் மருத்துவ மனையில் இருந்த சமயம் நடந்த உலக நிகழ்வுகளை ஒரு நாடகம் போலக் காண ஒரு வாய்ப்பு அளிக்கப் பட்டால், ஓ இவ்வளவுதானா நம் இடம் இந்த உலகில், இதற்காஅவ்வளவு ஓடினோம், எல்லாவற்றையும் சஞ்சீவி பர்வத ஆஞ்சனேயர் போல் முதுகில் சுமந்தோம், பறவை போல லகுவாக இன்றி பளு சுமந்தோம் என்ற எண்ணம் வாராது போகாது. ஆனால் இந்த ஞானம் எல்லாம் வரும். ஆனா வராது. இல்லை என்றால் நாடகத்தின் ஒரு பகுதியாய் இருந்த நாம் மாயத் தளையை அறுத்தெறிந்து விட்டுப் போகாமல் மறுபடி அடுத்த வேடம் ஏற்கத் தயாராவோமா. 

தினம், சற்று அமைதியான சுய ஆய்வு உதவலாம்.அதற்காக இமயமலை போக முடியாது. இருக்கும் இடம் போதும். ஓடும் ரயிலுள் அமர்ந்து வெளிக் காட்சிகளை நோக்குதல் போல இங்கேயே இருந்து கொண்டு, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு பாடமாக்கிக் கொண்டால் Evening years சலனமின்றி அமையும். வரும் போது எழுதப் படாத வெள்ளைத் தாள் போலத்தானே வந்தோம். விடை பெறுவதும் அவ்வாறே இருக்கட்டுமே. பல வண்ண மை கொண்டு எழுதி  பக்கத்தை நிரப்புவது போல குழப்பிக் கொள்ள என்ன அவசியம். எல்லார் கூடவும் நட்பாக இருப்போம். ஆனால் எல்லாருக்கும் அவரவர், வேலை உள்ளது. நம்மிடம் சொல்ல மாட்டார்களே தவிர எல்லாருக்கும் Self Love பொது. தள்ளி இருப்பது தவறில்லை. இன்றைய போதுக்கு யோசித்து விட்டேன். இனி நாளைதான்.




Tuesday, January 5, 2021

விஜயா விஜயம்

 அன்னை மலர் பாதம் சரணம் 

ஒரு வருடமாய் எதுவும் எழுதவில்லை. இன்று வெளியே வெள்ளம். மனதிலும் எண்ண வெள்ளம். எது அதிகமாகிறதோ அதன் பெயர்தானே  வெள்ளம்? மார்கழி மாதப் பிறப்பும் கூட. இட்லி என்றால் சட்னி சாம்பார் போல மார்கழி என்றால் ஒரு பெரிய பட்டியலே கூட வருகிறது. திருப்பாவை, கோவில், சூடான பொங்கல், போர்த்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் தூங்க மாட்டோமா என்று நினைக்க வைக்கும், விறைக்க வைக்கும் குளிர், அரங்கன் தரிசனத்துக்கும் பஜனைக்கும் ஆசை கொள்ளும் நல்ல மனசு, தலையணையையும் போர்வையையும் உதற விரும்பாத கெட்ட மனசு, இன்னும் எல்லாம்தான். காலைக் குளிர் தாலாட்டுகிறது. இரவுக் குளிர் தூக்கம் கெடுக்கிறது. காலில் அடிபட்டால் விந்தி நடப்போமே அது போல கோவிட் இந்த ஆண்டை நொண்டத்தான் வைத்து விட்டது. தேடி சோறு நிதம் தின்றுதான் வந்தோம். இந்த வருஷம் ஏனோ வேறு எதுவுமே செய்யவில்லை போல உள்ளது. ஆமாம், என்ன செய்ய வேண்டும்? வாழ்வின் இரண்டாம் இன்னிங்சில் என்னவெல்லாம் செய்யலாம், எது கூடாது?

காலையில் எழுந்தது முதல் வீட்டில் ஒரு தொழில் கூடம் இயங்க வேண்டும் என்றால் அது உணவுத் தொழிற்சாலையே. பசிக்கும். எனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றால் அது வீட்டின் சமையல் அறையே. அங்கு நானே ராணி. நானே மந்திரி. கேள்வி கேட்பாரில்லை. உதவியாளர்கள் கிடையாது என்பதை விட, அது உபத்திரவம் என நானே உதவி எடுத்துக் கொள்வதில்லை எனலாம். Consumers அதாவது நுகர்வோர், அதாவது நான் செய்த உணவை உண்ணும் வீட்டின் அங்கத்தினர்கள் ரொம்பவும் நல்லவர்கள். சாதுக்கள். எதிலும் குறை காணத் தெரியாதவர்கள். இத்தனை காலம் ஓடியே போனது. இப்போது வேறு ஏதும் செய்ய கொஞ்சம் நேரம் வேண்டும் போல இருந்ததால் சமையல் செய்ய விஜயாவை ஏற்பாடு செய்தோம். நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பது அவளால் எனலாம்.ஏன் இதை சற்று முன்னால் செய்யவில்லை தெரியவில்லை. காய்கனியாகவும் கூட்டுப்புழு பட்டுப்பூச்சியாகவும் இன்னும் எல்லாவற்றிற்கும் நேரம் வைத்துள்ளான் இறைவன். மனித வாழ்வை உற்று நோக்கின் சிறு நிகழ்வுகளிலும் அவன் ஆணை இருப்பது விளங்கும். ஆம். அவன் அன்றி அசைவேது?

ஒரு இரண்டு மணி நேரம் கிடைக்கிறது. என்ன செய்ய வேண்டும் முதலில். தன் தேடல் செய்ய உதவும் பல சாதனங்களில் எழுத்தே முதலில் நிற்கிறது எனக்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. நிதானப்பட ஒரு மாதம் பிடித்தது. ஆனால் நம் நெருங்கின பேருக்கே அந்த நேரம் நான் என்ன பண்ணுவேன் என்று அறியும் குறுகுறுப்பு உள்ளது. புற இயக்கம் மட்டுமே இயக்கம் அல்ல. நேரம் என்பது மைண்ட் ஸ்பேஸும் கூட. பீரோவை ஒழுங்கு படுத்துவது போல, இடம் மாறி உள்ள எண்ணங்களையும் அடுக்கிக் கொண்டு உள்ளேன். எல்லா புற அதிர்வுகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். வார்த்தைகளால், செயல்களால், உணர்வுகளால். ஆனால் எதனால் பதில் சொன்னால் ப்ரச்சினை இல்லையோ அந்த மௌனம் மட்டும் என்னை விட்டு எங்கோ போய் இருந்தது. வாழ்வின் இரண்டாம் பகுதியில் உடல் எல்லா நாளும் இளமையில் இருந்தாற் போல இருப்பதில்லை. தொல்லை தர ஆயத்தமாகும் உடலும் சோர்வடையும் மனமும் நித்ய கூட்டாளிகள். சேர விடக் கூடாது. மித்ரபேதம் செய்யவே வேண்டும்.

மனது லேசில் ஒத்துக் கொள்ளாத பலவற்றில் முதன்மையானது அதிகாரத்தை த்யாகம் செய்வது. காலை சமையலறை போகாமல் இருப்பது ஏதோ ஆட்சி கை மாறின எண்ணமே கொடுத்தது  முதலில். ஆனால் எனக்கென்று கொஞ்சம் நேரம் வேண்டும் என்ற எண்ணம் இன்னும் சற்று வலிமையாக இருந்தது போலும். அவ்வாறு நிகழ்ந்ததுதான் விஜயா விஜயம். மாற்றங்கள் முதலில் உண்டாக்குவது பயம்தான். ஆனால் அனுபவமும் கூட. ஸ்வாமி சித்பவானந்தா பகவத்கீதை உரையில் கூறுகிறார், முதலில் இல்லாமல் இருந்து, பிறகு வந்து மீண்டும் இல்லாமல் போகப் போவதே தேகம் என. விஜயாவை அப்படித்தான் எடுத்துக் கொண்டுள்ளேன். எங்கிருந்தோ வந்தாள்.இப்போது எல்லாம் நடக்கிறது. தேகம் போனாலும் ஆத்மா இருக்கும் என்பது போல விஜயா போனாலும் சாப்பாடு நடக்கும். அதனால் இந்த இடைவெளியை ரசிக்க விருப்பம்.

இப்போது மறுபடி முதல் பத்திக்குப் போகிறேன். நல்ல மனசின் ஆசைகள், இன்னும் சற்று கூட நேரம் தூங்க விரும்பும் கெட்ட மனசின் ஆசைகள் எல்லாம் விஜயா புண்ணியத்தில் நடக்கிறது. உடல் அடையும் அனுபவங்கள். உள்ளே உள்ள வஸ்து வேடிக்கை பார்க்கிறது. பார்க்கட்டும்.


கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...