Thursday, March 18, 2021

பாத்திரம்

 இன்று ஒரு குறும் செய்தி வந்தது. எங்கே இருந்து என்கிறீர்களா. வாட்சப்தான். செய்திப் பரிமாற்றம் வேறு வழிகளில் நடந்து விடக்கூடாது என நாம் அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு வாட்சப்பை ஆதரித்து வருகிறோமே. சும்மா திட்டக் கூடாது. நல்லனவும் அவ்வப்போது வரும். அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரித்து விடுமாமே அது போல Vigilant ஆக இருந்தால் வாட்சப்பினால் பலன் உண்டு. இன்று என்ன செய்தி பார்ப்போம். ரமண பகவானிடம் ஒரு பக்தர் கேட்டாராம், விவேகானந்தர் தன் குரு மூலம் கடவுளைக் கண்டாரே அது போல உங்களால் எனக்குக் கடவுள் காட்சி தர முடியுமா என. பகவான் புன்முறுவலித்து விட்டு சொன்னாராம் முடியும், நீ விவேகானந்தரானால் அது முடியும் என.. இந்த செய்தி என்னை மிகவும் கவர்ந்தது.அதுதான் பாத்திரமறிந்து பிச்சை இடல்.

இரண்டு கோப்பை மட்டுமே கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் நான்கு கோப்பை நீர் விட்டால் என்ன நடக்கும். நீர் கீழே வழியும் வீணாகும். நாம் பல சமயம் சின்ன பாத்திரமாக இருந்து கொண்டு இன்னும் இன்னும் என ஆசை கொள்கிறோம். தகுதிக்கு மீறி நம்மில் இடப்படும் எல்லாம் வீணே. சரியாக வாழ்வைப் படிப்பவர்க்கு எந்தப் பாத்திரத்தில் எதை எந்த அளவு இட வேண்டும் என்பதும் தெரியும்.இந்த இரண்டு நாளாக சமையல் அறையில் எந்தப் பாத்திரத்தைப் பார்த்தாலும் மனிதர்கள் போலவும் மனிதர்களைப் பார்த்தால் பாத்திரங்கள் போலவும் தெரிகிறது. அது சற்று உதவவும் செய்கிறது. யாரிடம் எந்த அளவு பேசலாம் என்று புரிகிறது. கொள்ளளவு கம்மியாக உள்ளதில் பாத்திரத்தின் பங்கில்லை. அது வடிவமைத்தவனின் Choice என்று  புரிகிறது. கடவுள் சிலரை எல்லாவற்றையும் ஏற்கும் பெரிய பாத்திரம் போலப் படைத்துள்ளான். அவர்களிடம் எதுவும் கூறலாம். உறவாடலாம். இடப்படுபவை கீழே சிந்தும் பயம், இல்லை. ஆனால் குட்டி வாளி என்று தெரிந்தும் அதில்  அதிகத் தண்ணீரைக் கொட்டப் பார்த்து அடடா எல்லாம் கீழே வீணில் போகிறதே என்ற புலம்பல் தவிர்க்க வேண்டும். 

பெரிய பாத்திரம், தான் அப்படி இருப்பது தன்னால்தான்  என்ற எண்ணம் கொள்வது எவ்வளவு முட்டாள்தனமோ அந்த அளவு Foolish எந்த கர்வமும். இடப்படுபவற்றை அமைதியாகத் தாங்குவது ஒரு கொடுப்பினை. சரியாக இருந்தால் சரியானது தேடி வரும். வரவில்லை என்றால் அந்தப் பொருள்கள் வேறு பாத்திரத்திற்குப் போக வேண்டியவை. நாம் அனைவரும் பாத்திரங்கள். பண்ணினவன் பார்த்துக் கொண்டுள்ளான்.

ரஞ்ஜனி த்யாகு

Mother Leads

No comments:

Post a Comment

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...