Saturday, February 23, 2019

ஆசைகளின் ஜனனமும் முடிவும்

உலகம் ஒரு சுழற்சியின் அடிப்படையில் இயங்குகிறது. சுழற்சியின் ஒரு நிலை மற்றொன்றிற்கு இட்டுச் செல்கிறது.  ஜனனமும் மரணமும்தான் பெரிய சுழற்சி. காலையும் மாலையும், இன்பமும் துன்பமும், காற்றும் வெயிலும், வேகமும் நிதானமும் தெளிவாகப் பிரிந்துள்ளன . ஒன்றுள்ள இடத்தில் மற்றது அநேகமாக இருப்பதில்லை. ஆனால் ஜனன மரணம் வேறுபடுகிறது. ஜனனத்தில் சில மரணங்களும் மரணத்தில் சில அழகிய ஜனனங்களும் நிகழ்வதுண்டு. தொடக்கம், முடிவு என்ற வார்த்தைகளை உபயோகித்துக் கொள்கிறேன். சில வார்த்தைகள் படிப்பது, எழுதுவது இரண்டுமே கடுமையாக இருப்பது போலத் தோன்றுகிறது. பௌதீகப் பிறப்பு, முடிவு பற்றினதில்லை கட்டுரை.  எண்ணங்களின் பிறப்பும் முடிவுமே . ஒரு வாழ்க்கை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவு முக்கியம் எண்ணங்களும்.  விளையாட்டில்லை .

சிற்றாசைகள் பிறக்கின்றன. ஓயாது மனத்தாய் சூல் கொண்ட பெண்ணாகவே இருக்கிறாள்.  பேறு காலம் ஒன்பது மாதம் இல்லை.  ஒன்பது வினாடிகளாகக் கூட இருக்கலாம்.  ஆசைக்  குழந்தையின் அளவைப் பொறுத்து அதன் கர்ப வாசம் அமையும்.  சில ஆசைக் குழந்தைகள் மனக் கருவறையில் நீண்டு தங்கி அம்மாவைப் பாடாய்ப் படுத்திவிடும். சில சரியான காலத்தில் பிறக்கும்.  வேறு சில குறை ப்ரஸவம் ஆகும்.  எப்படிப் பிறக்கினும் அந்த ஆசை என்ற குழந்தைக்கு நிர்ணயிக்கப் பட்ட வாழ்நாள் உண்டு. எப்படி தோன்றுவன எல்லாவற்றிற்கும் முடிவு உண்டோ அப்படி. ஆசைகள் பிறப்பதும்,நிறைவேறுவதும், நிறைவேறாது மடிவதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால், சில ஆசைகளின் முடிவில் நிகழும் ஜனனம், முக்கியமானது.  பேரரசர் அசோகருக்கு நிகழ்ந்தது போல. ஸ்வாமி அரவிந்தர் ஒரு வருட அலிப்பூர் சிறை வாசத்திற்குப் பின் சொல்கிறார், "ஒரு வருடம்,கானகத்தில், ஒரு ஆஸ்ரமத்தில் நான் இருந்ததாகச் சொல்வதே பொருத்தமாக இருக்கும்.  அது சிறைவாசம் அல்ல.  ஆங்கிலேயர்கள் கொண்ட காழ்ப்பின் ஒரே விளைவு நான் கடவுளைக் கண்டதுதான்"  என்று. ஸ்வாமி அரவிந்தருடைய யோகவாழ்வின் ஜனனம் நிகழ்ந்தது, அவருடைய தீவிர எண்ணங்களின் முடிவில். இதோ அவருடைய திரு வாக்கில்.


“I have spoken of a year's imprisonment. It would have been more appropriate to speak of a year's living in forest, in an ashram, hermitage. ... The only result of the wrath of the British Government was that I found God.”


ஒவ்வொரு சிற்றாசையின் முடிவையும் வேறொரு உயர்ந்த நிலையின் தொடக்கமாகப் பார்த்தால் மனச்சலனங்கள் அடங்குகின்றன.  பதட்டம் தரும் எல்லாம் ஆசைகள்தான்.  உள்ளும் புறமும் அமைதியே நிலைக்கட்டும் .  அல்ப விஷயங்கள் மீதான பற்றும் பிடிப்பும் நம்மிடம் இருந்து விடை பெறட்டும். மனத்தாய் சூல் கொள்ளும் காலம் முடியட்டும். அவளுக்கு வயசாகிப் போனது.  இன்னும் இன்னும் ஏன் ஆசைகள் பிறந்து மடிய வேண்டும்?  பிறந்து மடிந்த கோடானுகோடி ஆசைகளின் முடிவில் ஜனித்த சொற்ப நல்லவை நாம் உள்ளவரை நிலைக்கட்டும்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS

Sunday, February 17, 2019

அழியாத கோலங்கள்

தினப்படி வாசலில் நாம் அழியாத கோலங்கள் இடுவதில்லை. இந்தத் தலைமுறை கோலங்கள் இடுவதில்லை என்பது வேறு விஷயம். ஸ்டிக்கர் கோலம், ஸ்டிக்கர் பொட்டு , ரெடிமேட் உடை , இன்ஸ்டன்ட் உணவுகள், கோவிலில் மணி அடிக்கக் கூட மின்கருவி என்ற அவசர யுகம். அதை விடுங்கள். தலைப்பிற்கு வருவோம். தினம் வாசலில் போடும் கோலம், ஒரு நாளுக்கானது. மறு நாள்,வேறு புள்ளி,வேறு கோலம். ஒரு நாள் கூத்தாக செய்யும் செயல்களில் தவறுகள் நேர்ந்தால், அழித்துத் திருத்தலாம். அதாவது திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனாலும் சொல்கிறேன், அழிக்காமல்,தப்பு இல்லாமல் கோலம் இடுவது நன்று. கவனம் சிதறாமல் கோலம் இடுவது நன்று. அவ்வாறு வாழ்வது அதனினும் நன்று. அழியாத கோலங்கள் எங்கு இடுவோம்? கோவில்களில்? திருவிழாக்கள் சமயம்?பெயிண்ட்டால் ?  என்ன தெரிகிறது? அழியாத,சற்றே நிலையான விஷயங்கள் சிறப்பு வாய்ந்தவை. லேசில் அழிக்க முடியாத கோலங்களை உரிய இடத்தில்தான் இடலாம். ஆனால் வாய் எனும் ஆயுதம் கொண்டு மக்கள் மனம் என்ற மைதானத்தில் பெயிண்ட் கோலம் போன்று சுடுசொற்களால் கோலம் வரைவதை சகஜமாக செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் தப்பு கூட இல்லை. ஒரு ஸ்வபாவம். 

நம் ஒவ்வொருவர் மனதிலும் அழியாத கோலங்கள் உண்டு. நாமும் லேசுப்பட்டவர் இல்லை. பெயிண்டும் தூரிகையுமாய் சுற்றுவோர்தான். தூரிகையை உபயோகிக்க ஒரு முறைக்கிருமுறை யோசித்தால் நல்லவர்கள். இல்லையெனில் பொல்லாதவர்கள். சில நேரம் ஒரு கோடு வரைந்து விட்டு உடனே அழிக்க முயல்வோம். முடியாது. பக்கத்தில் வேறு கோடு இழுத்து கோலத்தை சரி பண்ணி விட்டதாக நினைக்கிறோம். ஆனால் இல்லை. கடுமையான பேச்சும், அவசரமாகவே எடுக்கும் முடிவுகளும் எனக்கு வேண்டாமே. நாளை சரியாகப் போகிற ஒன்றைப் பற்றிய தவறான யூகங்களும் , நாளை தவறாகப் போகிற ஒன்றைப் பற்றின வீண் ஜம்பங்களும் தவிர்க்க உடலுடன் சேர்ந்து உள்ளமும் வளர வேண்டும். வழக்கம் போல் போஸ்ட்டின் வித்து சுற்றி நடக்கும் , நடந்த நிகழ்வே. அதற்கு விரிவாக்கம் தர எனக்கு பயம் இல்லை. ஆனால் விருப்பம் இல்லை. உங்களுக்கு அறிந்து கொள்வதில் லாபமும் இல்லை. எனக்கொரு லாபம் உண்டு. பாடம் உண்டு. தூரிகையுடன் அழியாத தப்புக் கோலம் இட வருபவரைக் கண்டால் என் மனக்கோவில் மூடிக் .கொள்ளும். தன்னைக் காத்துக் கொள்ளும்.

நான் கடுமையானவர்கள் நிலையில் இருந்து கொண்டு யோசிக்கணும் என்று என் நலம் விழைவோர் கூறுகிறார்கள். ஏன்? எதற்காக? பகவான் கிருஷ்ணர் குருக்ஷேத்திர போருக்கு முன் அர்ஜுனன் மனநிலையில் இருந்து சிந்தித்திருந்தால் அது கீதைக்கு வழிகோலுமா? பலவீனத்தின் மறுபக்கம் கடுமை. ஸ்வாமி விவேகானந்தருக்கு மட்டும் இல்லை, எனக்கும் பலவீனம் மரணமே. கடுமை காட்டுபவர் நிலையில் இருந்து யோசித்தால், நான் தவறின் பக்கம் நிற்கிறேன். அது தேவை இல்லை. நிஜப்போரில் அர்ஜுனன் வில்லெடுத்தான். மனப்போரில் கதவை மூடுவதுதான் சரி என எனக்குள் உள்ள கடவுள் சொல்கிறார். அன்பிருக்கும்  இடமே சிவன் இருக்கும் இடம். சிவன் உள்ள இடத்தில், கடுமைக்கிடம் இல்லை. பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Monday, February 11, 2019

ஒரு ரூபாய்

ஒரு ரூபாய்க்கு மதிப்பு எவ்வளவு? குழந்தைக்கு அது ஒரு சாக்லேட். அம்மா உணவகத்தில் இரண்டு இட்லி. பக்கத்து வீட்டு மாமிக்கு வெற்றிலை பாக்குடன் தரும் நாணயம். சிக்னல் சமீபம் கையேந்துபவருக்கு ஒரு நாள் கிடைக்கும் பணத்தில் எத்தனையிலோ ஒரு பங்கு. கிரிக்கெட் வீரர்களுக்கு டாஸ் போடப் பயன்படும் கருவி. கஞ்சனுக்கு கோவில் உண்டியலுக்கென ஒதுக்கப்பட்ட காசு. பள்ளி குழந்தைகளுக்கு சின்ன வட்டம் வரையப் பயன்படும் பொருள். கோவில் யானைக்கு ஆசீர்வாதம் செய்ய,வேடிக்கைக்காகத் தரும் காசு. ஆயிரம்,லட்சம், கோடிகளில் புரள்வோருக்கோ அது செல்லாக் காசு. ஆனால், என் குழந்தை ராகவனுக்கோ அது பெரிய பணம். அவனுக்கு ஆட்டிசம். அவன் உலகில் பணம் என்றால் ஒரு ரூபாய். எந்த நாணயம், ரூபாய் நோட்டு காட்டினாலும் ஒரு ரூபாய் என்று கூறி சிரிப்பான். எவ்வளவு நிம்மதி தெரியுமா?  Life Insurance செய்து கொண்டு விட்டதால் மட்டும் எதிர்காலம் பாதுகாப்பாகி விட்டதாய் நினைப்பவர்களுக்கு ஒரு ரூபாயின் மதிப்பு தெரிவது கஷ்டம். ஒரு ரூபாய் என்ற எண்ணம் பெரியது. அதைக் கொண்டு நிம்மதி என்ற விலை மதிப்பற்ற ஒரு பொருளை வாங்கலாம்.

எது நிஜ Insurance ? நாம் செய்து விட்டோமா? இல்லை. இருபது வயது தாண்டும் முன் Insurance Policy எடுக்கலையா இன்னும் என்கிறோம். ஐம்பது வயது வரை மிகவும் மேலோட்டமானதொரு வாழ்வை வாழ்ந்து விடுகிறோம். உள்ளுக்குள் மைல் கணக்கில் கடக்க வேண்டிய தொலைவு உள்ள போது , வெளியே, இன்னும் வெளியே பயணப்பட்டுக் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாள் போகட்டும், நாளை, அதற்கு மறுநாள், இதோ அடுத்த வாரம், இதோ அடுத்த மாதம் முதல் எல்லாம் சரி செய்து விடலாம் என்ற தப்பு கணக்கில் நாட்கள் நகர்கின்றன. திரும்பும் முன் முதுமை வாயிலில் வந்து காத்து நிற்கிறது. சூப்பர் மார்க்கெட்டில், ஒரு குட்டிப் பையன், " பாட்டி, கொஞ்சம் வழி விடறீங்களா? " என்று கேட்கும் குரல், ஆட்டோக்காரர், " தாத்தா, நீங்க வயசானவங்க. உங்க கிட்ட ஜாஸ்தி கேட்பேனா?" என்று கேட்கும் குரல் கோபம் உண்டாக்கினால், எதுவும் பண்ணாமல் காலம் கடந்து கொண்டுள்ளது என்று பொருள். வாழ்வாங்கு வாழ்வோருக்கு வயது ஒரு எண். அவ்வளவே.

வாழ்வு என்பது தொடர்பு கொள்ளுதல் என்ற வாசகம் திரு பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் படித்தேன். தொடர்பு என்ற சொல் ஆழம் நிறைந்தது. நம்மைச் சுற்றியுள்ள உலகுடன் உள்ள உறவின் பெயர் தொடர்பு. அது தாமரை இலைக்கும் தண்ணீருக்கும் உள்ளது போல, ஒரு ரூபாய் நோக்கு  போல பிணைத்தும் பிணைக்காமலும் இருப்பின் சிறப்பு. நம்முடைய குறுகிய Intelligence ஐ வைத்துக் கொண்டு எல்லோரையும் பார்த்துக் கொண்டு யார் கையிலோ உள்ள கயிறில் அவர்கள் இட்ட முடிச்சை நான் அவிழ்க்கிறேன் என்று எண்ணம் கொண்டு, ஒவ்வொரு நாள் மனதில் புதுப் புது பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு,ஏற்றிக் கொண்டு , அந்தக் குறிப்பிட்ட நாளில் நடக்கும் ஒரு நிகழ்வை கண் அருகே வைத்துப் பார்த்துக் கொண்டு, அதாவது மற்ற எதையும் கண்ணால் பார்க்கவே முடியாதபடி ஒரு பக்கக் காக்கா பார்வை பார்த்துக் கொண்டு, அடடே நிமிஷமாய் ஜனவரியும் பிப்ரவரியும் கடந்து விட்டதே, இப்போதுதான் வருஷம் பிறந்தார் போல இருந்தது என்று புலம்பி விட்டு எஞ்சிய பத்து மாதங்களையும் அப்படியே கழித்தால், நிஜ insurance செய்யும் காலங்களை மெத்தனமாகக் கடக்கிறோம் என்றே பொருள்.  

எல்லாம் ஒரு ரூபாய் எண்ணம் எவ்வாறு உதவும்? பிங்க் கலர் 2000 ரூபாய், பச்சை நிற 500 ரூபாய், ஆரஞ்சு கலர் 200 ரூபாய் ஆகிய எதைக் கொண்டும் பொருள் வாங்கலாம். வெவ்வேறு பொருள். பொருள் வாங்குவது தவிர ரூபாயின் பயன் என்ன? இறுதிப் பலன் என்ன என்று யோசித்தால் எல்லாம் ஒரு ரூபாய். ஒரே ரூபாய். அதே போல், வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே பலன்தான். நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது. தினப்படி நிகழ்வுகளின் முக்கியத்துவம் அவ்வளவே. சந்தோஷத்தையும் வருத்தங்களையும்  வெளியிடாமல் இருப்பதல்ல பொருள். கையாள்வதில் தேவைப்படும் நிதானம். அது Insurance தான். அடுத்த நிமிட ஆச்சரியங்கள் தெரியாத வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. Life Insurance ம் Medical Insurance ம் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயத்தில் செய்து கொள்வது. ஆனால் ஒரு ரூபாய் Insurance நல்லது நடக்கும் என்ற உறுதியில் செய்து கொள்வது. உறுதியான அஸ்திவாரத்தின் மேல் கட்டிடம் எழும்புவதே சரி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...