Tuesday, October 8, 2019

வாசனை

எழுதத் தொடங்கி விட்டேன். கடைசியில்தான் தலைப்பு கொடுக்க வேண்டும்.
இனிப்பு மிக்ஸ்சர் என்று தலைப்பு தரலாமா என்று தோன்றுகிறது.  ஒவ்வொரு நாளும் புதிய சந்தோஷங்களை, நிறங்களை, அனுபவங்களை சேர்ந்து தருவதால், மிக்ஸ்சர் என்கிறேன். இனிப்பு சுவையை மட்டும் இன்றைய தினம் எடுத்துக் கொள்கிறேன். கசப்பும் காரமும் வேண்டாம். மிக்ஸ்சரில் முந்திரிப் பருப்பு அகப்பட்டால், சுவை அரும்புகள்  மகிழுமே, அது போல இன்றைய இனிமையான நிகழ்வு என் குருஜியின் கச்சேரி.  இரண்டு மணி நேரம், ஒரு தியானம் செய்யும் மனநிலையில்தான் கேட்டு வந்தேன்.
   
என் போன்ற பெண்களுக்கு எப்பவும் ஒரு குழப்பம் உள்ளது. பிடித்ததை செய்வதா அல்லது செய்வதைப் பிடித்தமானதாக ஆக்கிக் கொள்வதா என்பதே அந்தக் குழப்பம். இரண்டும் தப்பில்லை. பிடித்தது செய்பவர்கள் ரசித்து வாழ்கிறோம். செய்வதைப் பிடிக்கும்படி பண்ணிக் கொள்வது அமைதி. அதை ரசிக்கவும்  வேண்டுமெனில் ப்ரயத்தனம் தேவை. பாட்டு பிடிக்கிறது. படிக்கப் பிடிக்கிறது. வானம் பார்க்கப் பிடிக்கிறது. குழந்தைகளைத் தொட்டுப் பார்க்கப் பிடிக்கிறது. வயதானவர்களிடம் உள்ள குழந்தைத்தனம் பிடிக்கிறது. குழந்தைகளிடம் உள்ள மனமுதிர்ச்சி பிடிக்கிறது. முழு அமைதி  பிடிக்கிறது.விவாதங்கள் இல்லாத  நாள்கள் பிடிக்கிறது. சமைக்கப் பிடிக்கிறது. செருப்பு போடாமல் நடக்கப் பிடிக்கிறது. என்னை யோசிக்க வைப்பதால் சிலசமயம் சிறு முரண்பாடுகள்  கூடப் பிடிக்கிறது.

பிடிக்கிறது வரிசையில் பாட்டு முதலில் வந்துள்ளது. இப்போது எழுதுவது கச்சேரி சென்று வந்ததன் தாக்கம். 1997ல் இருந்து மணிசுந்தரம் சாரைத் தெரியும். இன்று விஜயதசமி. இதே போல் ஒரு விஜயதசமி நாளில்தான் முதலில் அவர்கள் வீட்டுக்குப் போனேன், மாணவியாக.  முதலில் கற்றுக்கொண்டது ஷண்முகப்ரியா ஸித்தி விநாயகம். இன்றும் ஷண்முகப்ரியா காற்றில் கலந்து வந்தாலும் மனது அமைதியாகிவிடும். ஒரு சில விஷயங்களே மனம் தொடும் ஆற்றல் வாய்ந்தவை. சார் பாட்டு Therapeutic என்று நினைத்துக் கொள்வேன்.  நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அருளப் பட்டுள்ளது. ஏதோ ஒரு செயல், நம்மை விட சிறப்பாக யாரும் செய்ய முடியாது என்றிருக்கும். அதில்தான் நாம் பூரணமாக வெற்றி பெற இயலும். பாட வருபவர்கள் எல்லாரும் பாடகர் இல்லை.

 பாட்டு கற்கப்  போனது என்னுடைய மிக சந்தோஷமான அனுபவம். கற்றல் என்பது வெறும் ஸ ரி க ம ப இல்லை. நேற்று கச்சேரியில் பெஹாக். வேறு யார் பெஹாக் அவ்வளவு அழகாகப் பாட முடியும் என்றிருந்தது. சார் பாடி நான் கேட்ட முதல் பெஹாக் நாராயணதே . பெஹாக் ராகம் ஒரு உருக்கொண்டு பகவான் நாராயணனுக்கு நமஸ்தே சொல்கிறது என்று அப்போதே நினைத்துக் கொள்வேன். வருடங்கள் உருண்டோடி விட்டன. மனம் உயரங்களில் சஞ்சரிக்கும் போது வாழ்வின் சிறு கவலைகள் தீண்டுவதில்லை. புவிஈர்ப்பு  எல்லையைத் தாண்டின ஒன்றை கீழே இழுக்கும் சக்தி பூமிக்கு இல்லை.க்ளாஸ் போகும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன், இசையும்  அதை சதாகாலம் ஸ்வாசிப்பவர்களும் வேறு உலகத்தவர் என்று. உலக நிகழ்வுகளால் இழுக்கப்படாமல், அதாவது புவி ஈர்ப்பு விசையைத்  தாண்டி போன பொருள்களுக்கு இணையான இருப்பு சாத்தியம் என்று தோன்றும். வாழ்வு பல மிக அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டி உள்ளது. எல்லாம் இருந்தும் எளிமையானவர்கள். எல்லாம் கிடைத்துள்ளதற்கு நான் காரணம் இல்லை என்பதை உணர்வு பூர்வமாய் அறிந்தவர்கள்.இன்னொரு பிரிவினர் வாழ்வு எதைக் கொடுப்பினும் அதை ரசிப்பவர்கள். எளிதில் கிடைக்க முடியா சொத்தான த்ருப்தியைத் தனதாக்கிக் கொண்டவர்கள்.

பள்ளி ஆசிரியர் போல,என் மனம் கவர்ந்தவர்களுக்கு ரேங்க் தர இயலாது. சார் ஒரு இசை ஆசிரியர் மட்டும் இல்லை. மேலே சொன்ன இரண்டு பிரிவில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற அலசலும் தேவை இல்லை. ஷண்முகப்ரியா போல, தர்பாரி கானடா போல , எப்போது கேட்டாலும் இனிமை தரும் ராகம் போல ஒருவர். வாழ்வின் பல கட்டங்களில் அறிமுகமாகி என்னுடன் (மனதளவில்) ,  தினம் பயணப்பட்டுக் கொண்டுள்ளவர்கள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களில் பலரை எப்போதோதான் சந்திக்கிறேன்,தொடர்பில் வருகிறேன். ஆனாலும் பூக்கூடையில் தங்கிய ஜாதிமல்லியின் மணம் போல, மனத்தில் ஒரு வாசனை தங்கி உள்ளது. இன்றைய கச்சேரி, மணத்தை மனம் உணர தூண்டுகோலானது . 

No comments:

Post a Comment

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...