நேற்று சாலை சிக்னலில் ஒரு பெண் குழந்தையைப் பார்த்தேன். என் இடுப்பு உயரம் மட்டுமே இருந்த சிறுமி. குட்டி மனிதர்களைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். இந்தக் குழந்தை கவனம் ஈர்த்ததற்கு வேறு காரணமும் உண்டு. அந்த சிறுமியைக் காட்டிலும் சிறிய இன்னொரு குழந்தை ஆனந்தமாக அக்கா இடுப்பில் சவாரி மேற்கொண்டிருந்தது. சிறுமி அதனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். கண்களில் அப்படி ஒரு வாஞ்சை. சிக்னல் காத்திருப்பு இரண்டே நிமிடங்கள். அந்த நேரத்திற்குள் அந்தக் கண்களின் மொழி புரிய ஒன்று நமக்கு காமரா கண்கள் வேண்டும். அல்லது அவ்வளவு பகிரங்கமான நிகழ்வாக அது இருந்திருக்க வேண்டும்.அப்போது தோன்றிய எண்ணங்களின் வடிவமே இந்த போஸ்ட்.
பெண் குழந்தைகள் Special. பெண்கள் அம்மா ஸ்தானம் பெற வயதாவதோ கல்யாணம் ஆவதோ முக்கியம் இல்லை. மனசில் காருண்யம் உள்ள எல்லாரும் அம்மாதான்.பண்டைய நாள்களில் தம்பி பாப்பா பிறந்த கணம் முதல் பெண் குழந்தை பாதி அம்மாவாகி விடும். இப்போ உள்ள நாம் இருவர் நமக்கொருவர் குடும்பங்களுக்கு இந்த செய்திகள் Out of syllabus.அன்பாக இருப்பவள் அம்மா. மற்றவர் குறைகளைப் பெரிது படுத்தாதவள் அம்மா. மன்னிக்கத் தெரிந்தவள் அம்மா. எல்லாம் பண்ணி விட்டு சொல்லிக் காட்டாமல் இயல்பாய் இருப்பவள் அம்மா. சக உயிர்களின் துன்பம் காண சகியாதவள் அம்மா. பொறுமை காப்பவள் அம்மா. இதெல்லாம் இருந்தால் ஆறு வயசு சிறுமி அம்மாதான். இந்த எந்த குணமும் இல்லாத அறுபது வயதுப் பெண் சும்மாதான். மிக முக்கியமான இன்னொன்று. அர்த்தநாரீஸ்வர தத்துவம் கூறுவது போல பெண்ணிடம் ஆண் தன்மைகள் உண்டு. ஆணிடம் பெண் குணம் உண்டு. அம்மாவின் குணங்கள் கொண்ட அற்புதமான Men இருக்கிறார்கள். தாயுமானவ ஸ்வாமி மாதிரி.
பேசலாம்.....
No comments:
Post a Comment