Friday, January 29, 2021

24 மணி நேரம்

 இன்று காலை கண் முழித்தது என் சகோதரிக்கு பேரன் பிறந்த செய்தியுடன். சந்தோஷம். குழந்தை பிறப்பைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம். ஆனால் வாழ்வைக் கொண்டாடுகிறோமா என்றால் இல்லை. யார் வாழ்வையோ கொண்டாடி, சுயம் தொலைத்து வழி நடத்தப்பட்டு, மற்றவரை வழி நடத்தி, வாழும் நாட்களை நகர்த்துகிறோம் என்றே படுகிறது. சத்ரபதி சிவாஜியின் வாழ்வு சரித்திரம் என்றால் என் வாழ்வும் சரித்திரமே. நான் சரித்திரம் ஆகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டா குழந்தை பிறக்கிறது? இல்லையே. பத்து வயது வரை குழந்தைகள் சரி. அல்ஜீப்ராவும் சரித்திரமும் அறிவியலும் அறியாத பிள்ளை முட்டாள் இல்லை. தன்னை அறியாதவர்களே முட்டாள். இன்று பூத்த அந்த குழந்தை சரித்திரம் படைக்கட்டும்.

மூன்று நாளாக பொங்கல் கொண்டாட்டங்கள்.பொங்கலுக்கு முதல் நாள் என் மாமனார் உடல் நிலை மோசமானது. சற்று பயம் அளித்தது. ஏன் பயம். நம்மால் அறிய முடியாதனவற்றை பற்றின ஹேஷ்யங்கள் செய்வதால் பயம். ஏன் மனிதமனம் இவ்வாறு இயங்குகிறது. அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன். நல்லது பற்றின சந்தேகம். அல்லாதன பற்றின கவலை. இந்தக் கூட்டு எண்ணக் கலவையா வாழ்க்கை. சாலை ஓரம் பஞ்சடைந்த கண்ணுடன் சில்லறைப் பொருள் விற்கும் சிறுமி நாளை பொங்கல் பண்டிகை என அறிவாளா. எதனால் அவள் சாலை ஓரம் அலைகிறாள். நாம் ஏன் காணாதது போல வேறு திசை நோக்கி கார் கண்ணாடியை திறந்து தொலைக்காதே என்று குழந்தைகளுக்கு நல்ல பாலபாடம் அளிக்கிறோம். இவை எல்லாம் யோசிக்க வேண்டியவையே. உலக அரங்கில் நம் இடத்தை மற்றவருடன் ஒப்பு நோக்குவது இயல்பாக நிகழ வேண்டிய ஒன்றே. எத்தனை கிடைத்துள்ளது. நாம் அடைந்தவற்றைப் பற்றிக் கேள்வி எழுவதில்லை நமக்கு. பிறருக்குக் கிடைத்த ஒன்று நமக்குக் கிடைக்கவில்லை என்ற எண்ணம் ஏக்கம் அளிக்கிறது. பலருக்கு கிடைக்காத ஒன்று ஏன் எனக்கு இவ்வளவு சுலபமாய்க் கிடைத்தது என்ற உள் தேடல் ஏற்றம் தருகிறது.

நிமிட நேரத்தில் வாழ்வின் காட்சிகள் மாறும் அதிசயம்.இன்று மாமியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவர்களை சுற்றி நாடகங்கள் நடப்பதை பார்க்கிறேன். உலகம் சுயநலம் நிறைந்ததே என உணர்கிறேன். நான் இந்த உலகத்தை சேர்ந்தவளே. என்னை உயர்த்திக்கொண்டோ தனிமைப்படுத்திக் கொண்டோ எதுவும் பேசவில்லை. நான் எழுதிக் கொண்டுள்ளது காந்திஜியின் சத்திய சோதனை போன்ற சுயசரிதம் அல்ல. அதனால் எந்த Declaration ம் தரவில்லையே தவிர என்னைப் பற்றியும் மற்றவர் நினைவுகள் எப்படியும் இருக்கலாம். ஆழமாக சிந்தித்தால் அன்றி நம் தவறுகள் நமக்குப் புலப்படுவதில்லை. மருத்துவமனையில் ஒருவர் உள்ள போதே சுற்றங்கள் அவர்களை சிந்தையில் இருந்தும் விலக்கி அல்லது சற்று தள்ளியாவது வைத்து வடுகிறார்கள். கடவுள் தீர்ப்பு எப்படியோ மனிதர்கள் அவர்கள் வாழ்ந்தது போதும் என்று தீர்மானிக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு சம்பளம் நின்று விட்டால் என்ன ஆகும் என்ற ஞாயமான கவலை. அதனால் அவள் அவர்கள் திரும்பி விட்டால் போதும் என்கிறாள். அசையாமல் அவர்கள் இருப்பதில் அவளுக்குக் கவலை இல்லை. உண்மையில் வேலை இன்னும் எளிது. 

சுற்றங்களுக்கு அடுத்தடுத்த வேலைகள் தாமதப்படக் கூடாதே என்ற பயம். அதை வெளிக்காட்ட இன்னும் பயம். ஒருவர் உயிருடன் உள்ள போதே அடுத்த நம் வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல் இவர்கள் நகர்வார்களா என்ற கணக்குப் போடும் ஜீவன் மனிதன் மட்டுமே. பரிதாபம். ஏன் நமக்கு எதையும் முழுமையாகப் பண்ணத் தெரியவில்லை. சந்தோஷம் வரும் போது குதூகலிப்போம். வருத்தம் வரும் போது அதையும் வாய் மூடி அனுபவிக்கத்தானே வேண்டும். மனசு இருப்பதால் ஓயாத கணக்கு. தேவையா. உயிருக்குப் போராடும் ஆத்மா இந்த அதிர்வுகள் தாண்டிப் பிழைக்க வேண்டும். அவர்கள் நலமுடன் திரும்பி வந்தால் தான் மருத்துவ மனையில் இருந்த சமயம் நடந்த உலக நிகழ்வுகளை ஒரு நாடகம் போலக் காண ஒரு வாய்ப்பு அளிக்கப் பட்டால், ஓ இவ்வளவுதானா நம் இடம் இந்த உலகில், இதற்காஅவ்வளவு ஓடினோம், எல்லாவற்றையும் சஞ்சீவி பர்வத ஆஞ்சனேயர் போல் முதுகில் சுமந்தோம், பறவை போல லகுவாக இன்றி பளு சுமந்தோம் என்ற எண்ணம் வாராது போகாது. ஆனால் இந்த ஞானம் எல்லாம் வரும். ஆனா வராது. இல்லை என்றால் நாடகத்தின் ஒரு பகுதியாய் இருந்த நாம் மாயத் தளையை அறுத்தெறிந்து விட்டுப் போகாமல் மறுபடி அடுத்த வேடம் ஏற்கத் தயாராவோமா. 

தினம், சற்று அமைதியான சுய ஆய்வு உதவலாம்.அதற்காக இமயமலை போக முடியாது. இருக்கும் இடம் போதும். ஓடும் ரயிலுள் அமர்ந்து வெளிக் காட்சிகளை நோக்குதல் போல இங்கேயே இருந்து கொண்டு, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு பாடமாக்கிக் கொண்டால் Evening years சலனமின்றி அமையும். வரும் போது எழுதப் படாத வெள்ளைத் தாள் போலத்தானே வந்தோம். விடை பெறுவதும் அவ்வாறே இருக்கட்டுமே. பல வண்ண மை கொண்டு எழுதி  பக்கத்தை நிரப்புவது போல குழப்பிக் கொள்ள என்ன அவசியம். எல்லார் கூடவும் நட்பாக இருப்போம். ஆனால் எல்லாருக்கும் அவரவர், வேலை உள்ளது. நம்மிடம் சொல்ல மாட்டார்களே தவிர எல்லாருக்கும் Self Love பொது. தள்ளி இருப்பது தவறில்லை. இன்றைய போதுக்கு யோசித்து விட்டேன். இனி நாளைதான்.




No comments:

Post a Comment

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...