Wednesday, January 1, 2020

முதல் நாள் 2020

ஜனவரி 1, இன்று. லீப் வருஷம். அடுத்த பத்தாண்டுகளின் ஆரம்பம் எனலாம். இன்னும் பத்து வருஷங்கள் 202 என்று தொடங்கும். மிக முக்கியத்துவம் வாய்ந்த தினம். வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் பார்க்க இரண்டு நிலைகள் உண்டு. மேல், கீழ். மேலே இருந்து, கீழ் நோக்கின், வாழ்க்கைச் சிக்கல்கள் விலகுகின்றன. கீழிருந்து மேல் நோக்குவது ஜிலேபி பண்ணுவது போல் சிக்கல். ஒரு பொருளின் முப்பரிமாணங்கள் காண்பது கலை . சுலபம் அல்ல. எல்லாம் வெறும் கோடுகளாகத் தெரிந்தால், எங்கேயிருந்து பார்த்தால் மூன்றாம் டைமென்ஷன் தெரியுமோ அங்கிருந்து நோக்க வேண்டும். அப்போதுதான் உண்மை பிம்பம் புலப்படும். அதற்கு சும்மா இருக்க வேண்டும் என அறிந்து கொள்ள செய்யும் முயற்சியே 2020 ன் முதல் பாடமானது.

பொம்மலாட்டத்தை நடத்துபவனுக்கு தானே பொம்மைகளை ஆட்டுகிறோம் என்று தெரியும். பார்வையாளனுக்கு அது தெரிவதில்லை. அதனால்தான் காட்சி ரசிக்கிறது. நாம் உலகில் பார்வையாளர்கள். நடப்பனவற்றை ரசிக்கலாம். இது காட்சி என்றுணர்ந்ததால் அதில் வரும் சோக நிகழ்வுகள் நம்மை காட்சி முடியும் நேரம் தாண்டி, தொடுவதில்லை. ஆனால் வாழ்வெனும் நாடகம் நமக்கு அந்த சலுகையை அளிப்பதில்லை. நாடகம் நடக்கும் போதே நாடகம் என்று தெரிந்து விட்டால் நலம். அதுதான் இரு நோக்கு. எல்லோரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்கிறார்கள். அளிக்கப்பட்ட பாத்திரத்திற்கேற்ப ஆடுகிறார்கள். இதில் தப்பில்லை. அவரவர் இயல்பே ஒருவரை இப்படி இப்படி நடக்கத் தூண்டுகிறது. அதுதான் பிரச்சினைகளை சற்றே மேலே போய் நோக்குவது. கீழிருந்து நோக்குவது என்ற சொல் தொடரை, நான் கேவலமான அர்த்தத்தில் உபயோகிக்கவில்லை. நடப்புகளுடன், மனிதர்களுடன் நம்மைப் பிணைத்துக் கொண்டு படும் அவதி என்ற அர்த்தம்தான் அதற்கு. 

வெளி உலகுடன் நாம் கொள்ளும் தொடர்பின் போது பார்வையாளராக இருக்கும் நாம், நம் உள்ளே நோக்கும் சமயம், ஆட்டுவிக்கப் படும் பொம்மைதான். எந்தக் காட்சியில் யாருடன் இருக்க வேண்டும், எத்தனை பெரிய பங்கு நம்முடையது, யார் வாழ்வில் நான் ஹீரோ, யாருக்கு வில்லன், அதே போல் யாருடன் அதிக வசனங்கள் பேசப் போகிறோம், யாருடன் சில காட்சிகள் மட்டும்தான், எந்த கதாபாத்திரத்தை சந்திக்கவே போவதில்லை எல்லாம் ஆட்டுபவனின் முடிவு. சிவமே அன்பு என்னும் ஆத்திகவாதிகளுக்கும் சரி, அன்பே சிவம் எனும் மற்றவர்களுக்கும் சரி. உள்ளேயும் வெளியேயும் போர் நிகழாமல் நம்மை சேர்வன, சேர்பவர்கள் நம்முடன் பயணிக்க ஆட்டுபவன் செய்த முடிவு. அகப்போர், புறப்போர் இரண்டும் அபாயமே. போர் மேகங்கள் சூழும் போதே பின்வாங்கி விட்டால் நலங்கள் வரும். 2020 ன் முதல் நாள் முடிவல்ல, இது. வரப்போகும் பத்தாண்டுகளின் இனிய துவக்கம்.

பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

No comments:

Post a Comment

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...